தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 08 - ஜெய்
பேச்சு சுவாரஸ்யத்தில் தாத்தாவும், பாட்டியும் வருவதை கவனிக்காத மடத்தனத்தை எண்ணி நொந்தபடி ரகுவும், பத்ரியும் இருக்க.... கோவத்துடன் அவர்களை நெருங்கி இருந்தார் தாத்தா....
“என்ன நடக்கறது இங்க...”, தாத்தா கேட்டபடியே வர, அவருக்கு பின்னால் குறையாத கோவத்துடன் வந்தார் பாட்டி...
“இல்ல தாத்தா... சும்மாதான் பேசிண்டு இருந்தோம்....”, ரகு பதற்றத்துடன் சொன்னான்...
“எப்போலேர்ந்து பெரியவாக்கிட்ட பொய் சொல்ல ஆரம்பிச்ச ரகு.... ஒழுங்கா உண்மையை சொல்லுங்கோ... எல்லாருமா என்ன பேசிண்டு இருந்தேள்....”
“அது ஒண்ணும் இல்லைப்பா... அன்னைக்கு வந்தாரே கண்ணன்... அவர் மறுபடியும் பசங்கள்ட்ட பேசி இருப்பார் போல இருக்கு.... அத பத்தித்தான் ரகு சொல்லிண்டு இருந்தான்...”
“அதான் அன்னைக்கே அவர்க்கிட்ட எங்களுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டோமே... எதுக்கு அந்த மனுஷர் மறுபடி மறுபடி தொந்தரவு தரார்...”
“இல்லை தாத்தா.... நம்ம மைத்தி நன்னா விளையாடறா இல்லையா... அதுதான் அவளை எப்படியாவது மேல கொண்டு வரணும்ன்னு அவருக்கு ஒரு ஆசை... அதுதான் இன்னைக்கு அங்க கோச்சிங் பண்றவர கூட்டிண்டு வந்தார்...”
“எப்போ சின்ன பசங்க எல்லாம் நாட்டாமை ஆனேள்.... இதெல்லாம் நம்மாத்துக்கு தோதுப்படாதுன்னு தாத்தா அன்னைக்கே சொல்லிட்டாறோன்னோ...”,பாட்டி சொல்ல ரகு பொறுமையிழந்தான்....
“ரெண்டு பேரும் ஏன் பாட்டி இப்படி பிடிவாதம் பிடிக்கறேள்... இந்த மாதிரி வாய்ப்பெல்லாம் எல்லாருக்கும் கிடைக்காது.... நம்ம மைத்தி ஏதோ அதிர்ஷ்டம் பண்ணி இருக்கா.... அதுதான் அவர் கண்ணுல பட்டிருக்கா... நம்மளைத் தேடி ஒரு வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக்கணும் பாட்டி...”
“நீ சொல்றது நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருமான்னு யோசிக்கணும் ரகு... இது இன்னையோட முடியற சமாச்சாரம் இல்லை... ஏதோ ஸ்கூல்ல விளையாட கூப்பிட்டா போறது சரி.... அதுக்கூட பொம்மனாட்டிக்கு எதுக்கு கிரிக்கெட்டெல்லாம்.... ஒழுங்கா படிச்சு நல்ல வேலைக்கு போற வழியை பாருங்கோ...”
“பாட்டி எதுக்கு இப்போ ஆண், பெண்ணுன்னு பிரிச்சு பேசறேள்... திறமை இருக்கறவா அதுல முன்னேறணும்... அதுக்கு என்ன வழின்னு பார்க்கணும்...”
“இள வயசுடா நோக்கு அம்பி... அதான் இப்படி துள்ளிண்டு பேசற... சரி அப்படியே இவளை பெரிய கிரிக்கெட் விளையாட்டுக்காரியா ஆக்கறோம்னே வச்சுக்கோ.... நாளைக்கு இவளுக்கு எப்படி கல்யாணம் நடக்கும்... எத்தனை பேர் தன்னோட மாட்டுப்பொண்ணு விளையாட்டு