இந்த வீட்டை விற்றால் நமக்கு இந்த ஏரியாவிலேயே டூ பெட்ரூம் பிளேட் விலைக்கு வாங்கணும்னா, இன்னிக்கு இருக்கிற விலைவாசிக்கு ஒரு கோடி ரூபாய் ஆகும். அந்தப் பணத்தை தந்தாலும், பிளாட் கிடைக்குமா? நோ சான்ஸ்!
ஏன்னா, தெரு முழுக்க கடைகள்! பெரிய கடை, சின்ன கடை, டீக்கடை, ஓட்டல், மளிகை கடை போல கடைகள்!
இந்த ஏரியாவிலிருந்து வேற எந்த பகுதி போனாலும் உங்களுக்கு, எனக்கு, நம்ம பிள்ளைங்களுக்கு வாகனம் வாங்கியாகணும்! அதுக்கு ரெகுலரா செலவு வேற!
பணம் செலவாகிறது மட்டுமில்லே, எவ்வளவு கவலை, கஷ்டம், சங்கடம்?
பணத்தை மட்டுமே பார்க்காதீங்க! நம்ம வீட்டு பத்திரத்தை பேங்கிலே அடகு வைத்து வாங்கியிருக்கிற கடனை அடைக்கணும்!
வாங்கறவன், மனைக்கு பட்டா இருக்கான்னு கேட்டு, இல்லேன்னா முதல்லே அதை பதிவாளர் அலுவலகத்திலே பணம் கட்டி வாங்கி வான்னு சொல்வான்.
அங்கே போனால், அது கிடைக்க லஞ்சம் தந்தாலும் பத்து வருஷம் ஆகும்.......
உங்களை அதைரியப் படுத்தலே, இதையெல்லாம் முதல்லே தெரிஞ்சிக்குங்க!
இந்த புரோக்கர் பிரபா நமக்கு புதுசில்லே! ஏற்கெனவே இந்த பிளாட்டை நாம் அவன்மூலம் வாங்கினபோது பட்ட கஷ்டம் மறந்துபோச்சா? மனசாட்சி இல்லாம, பொய் சொல்வான். நம்மை பிரச்னையிலே சிக்க வைச்சிட்டு, தலைமறைவாகி விடுவான், அவன்!
ஒரு வாரம் இவைகளை சிந்தித்து முடிவு எடுங்கன்னு சொல்றேன்! சரியா?"
மனைவி கலாவின் சொற்களில் உள்ள யதார்த்தம் புரிந்து, இடிந்து போய் அமர்ந்திருந்தான், நெடுநேரம், நிரஞ்சன்!
" அப்பா!" என்று குரல் கேட்டு தலை நிமிர்ந்தான். மகன் சேகர்!
" அப்பா! நீயும் அம்மாவும் பேசினதை முழுக்க கேட்டு யோசித்துப் பார்த்தேன். என் அபிப்பிராயத்தை சொல்லவா?"
நிரஞ்சன் தலையசைத்து சம்மதம் தெரிவித்தான். " அப்பா! அம்மா சொன்ன அத்தனை விஷயங்களும் சரி தான்; ஆனால் ஒரு விஷயம், அம்மா கவனிக்கலைன்னு நினைக்கிறேன்.
நமக்கு கிடைக்கப் போகும் பணம் மூணேகால் கோடி ரூபாய்! மற்றவர்கள் பெறப்போகும் ஒண்ணேகால் அல்ல; மூணேகால் கோடி ரூபாயிலே அசுவமேதயாகமே பண்ணலாம்.
நல்ல வீடு, கார், டூவீலர், சைக்கிள், எல்லாம் வாங்கினபிறகும் நிறைய மீதி பணம் இருக்கும். அம்மா பேங்கிலே வேலை செய்து தினமும் கோடிக்கணக்கா பணத்தை பார்க்கிறதனாலே அதன் அருமை தெரியலே!