நீ ஆபீஸிலே நாற்பது வருஷம் வேலை செய்து ரிடையராகும்போது, உனக்கு கிடைக்கப்போவது ஏழெட்டு லட்சங்கள்! கனவிலேகூட நம்மாலே கோடி ரூபாயைப் பார்க்க முடியாது.
நிறைய பிரச்னைகளை சந்திக்கணும் என்பது உண்மைதான்!
பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை ஏது? பயப்படத் தேவையில்லை. எதிர்நீச்சல் போட்டுப் பார்ப்போம். வெற்றி கிட்டாவிட்டாலும், நமக்கு நஷ்டம் ஒன்றுமில்லை. நம் கையில் தற்போது உள்ள பணம் குறையப் போவதில்லை!
ஆனால், நம் முயற்சி வெற்றி பெற்றால், நமக்கு ஒளிமயமான எதிர்காலம் உறுதி! ஆண்டவன் நமக்கு வழியைத்தான் காட்டுவான். அந்த வழியில் சென்று பயன் பெறுவது நம் முயற்சியில்தான் உள்ளது.
உம்....அப்பா! அம்மா ஏதோ பட்டாவைப் பற்றி சொன்னாளே, கவலைப் படாதே! என் க்ளாஸ்மேட் ஒருத்தனின் அப்பா, பதிவுத் துறை மேலாளராயிருக்கார். அவர்மூலமா நம்ம முயற்சி வெற்றி அடையும்.
அதனாலே, தயக்கமே வேண்டாம்! முயற்சி செய்!
புரோக்கர் பிரபாவை நீ தேடிப்போகலை, அவனாக வந்து இந்த திட்டத்தைச் சொன்னான்னா, என்ன அர்த்தம்? கடவுள் அவனை நம்மிடம் அனுப்புவானேன்? வேற ஒரு ஓனர்மூலமா இதே முயற்சியை செய்யலாமே, அதனாலே, வந்தது பிரபா இல்லே, பகவான்!"
நிரஞ்சன் நிமிர்ந்து அமர்ந்தான். மகன் சேகரின் கைகளை குலுக்கி அவன் சொன்னதை பாராட்டினான்.
சேகரை உட்கார்த்திய பின், மனைவி கலாவை அங்கு வரவழைத்தான்.
" கலா! நீ யோசனை செய்னு சொன்னே, சேகர் இந்த வாய்ப்பே கடவுள் நம் மீது பரிவு காட்டி அனுப்பினார் என்று சொல்றான்.
ஒண்ணு செய்வோம்! பூஜையறையிலே சுவாமிக்கு முன்பாக சீட்டு குலுக்கிப் பார்ப்போம். அதன்படி முடிவு செய்வோம். ஓ.கே.யா?"
" நான் ஒண்ணும் தப்பா சொல்லலே, யோசனைக்குப் பிறகு முடிவு எடுங்கன்னுதான் சொன்னேன். உங்களுக்கு என்ன தோணுதோ அதன்படி செய்யுங்க!"
சேகர் இரண்டு துண்டு காகிதங்களிலே, 'எஸ்', 'நோ' என்று தனித்தனியே எழுதி பூஜையறைக்குச் சென்று, அப்பா, அம்மாவையும் உடன் வைத்துக்கொண்டு கடைக் குட்டியை அழைத்தான். " பாமா! சுவாமிக்கு முன் நான் இந்த ரெண்டு துண்டு காகிதங்களை குலுக்கிப் போடறேன். நீ கண்ணை மூடிக்கொண்டு ஒரு காகிதம் எடுத்து என்னிடம் கொடு!" என்றான்.