தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 18 - சாகம்பரி குமார்
சத்யன் ரஞ்சனை அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்றான். அங்கு அவர்களுக்காக கேசவ் காத்திருந்தான். அவனிடம் அவசரமாகவும் கோபமாகவும்...
"அந்த பரத் ராஸ்கல் எங்கே?' என்று கேட்டான். அதற்கு கேசவ்,
" அவன் உள்ளே செல்லில் இருக்கிறான். அவனிடம் எல்லா விவரங்களையும் கேட்டு விட்டேன். இன்னும் அவன் எதையோ மறைப்பதாக எனக்கு தோன்றுகிறது. உன்னுடைய மாமனாரை விசாரிக்க வேண்டும். அதற்கு அவர் வீட்டிற்கு ஆளை அனுப்பி இருக்கிறேன்."
"இப்பொழுது நான் பரத்தைப் பார்த்தாக வேண்டும்' என்று சத்தியன் சொன்னான்.
"உன்னுடைய முகத்தை பார்த்தால் கலவரமாக இருக்கிறது. கோபம் தெரிகிறது. நீ அவனை அடிக்க கூடாது. அது சரியும் அல்ல. விசாரிக்கதான் நாங்கள் இருக்கிறோம். நீ அவனிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் கேட்டுக் கொள்ளலாம்"
"கேசவன்… எங்களுக்கு புரிகிறது. இப்பொழுது அவனிடம் பேசியே ஆகவேண்டும். அழைத்து செல்கிறாயா" என்று ரஞ்சன் கேட்டான்.
"அதுக்கு முன்னே விசாரணையில் அவன் என்ன சொல்லியிருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க… அப்பதான் உங்களுடைய சந்தேகத்தையும் தீர்த்துக்க முடியும்." என்ற கேசவ் தன்னிடமிருந்த வீடியோவை கம்ப்யூட்டர் திரையில் ஓட விட்டான்.
பரத் கலங்கிய முகத்துடன் தரையில் அமர்ந்திருந்தான். அவன் எதிரில் நாற்காலியில் கேசவ் அமர்ந்திருக்க… கேள்விகள் ஆரம்பித்தன.
" ஒண்ணுமே தெரியாதுனு சொன்னால் விட்டுடுவோமா… என்ன நடந்ததுனு இப்ப சொல்லுடா.."
"எனக்கு தெரியாது சார்… மாமா என்னை கூப்பிட்டு மீரா செத்து போயிட்டாள்னு சொன்னார்…. அவ்வளவுதான் தெரியும்"
"அவர் எங்கேடா வந்தார்… நீதானே மீரா பின்னாடி போனே… வீட்டை விட்டு வெளியேறிய மீராவை துரத்திட்டு போனே… அவங்க பஸ்ஸில ஏறிட்டாங்க… நீ கார்ல பின்னாடியே போயிருக்க… இடையில பஸ்ஸை நிறுத்தி அவங்களை இறக்கிட்ட. இப்ப சொல்லு அவங்களை எங்கே ஒளிச்சு வச்சிருக்க"
"ஐயோ… அப்படி இல்லை… அந்த பஸ் பின்னாடிதான் போனேன். திருநெல்வேலியில நிக்கறப்ப அவளை பிடிக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள பஸ் விபத்துக்குள்ளாயிடுச்சு."
"மீரா பஸ்ஸுக்குள்ளதான இருந்தாங்களா.."
" ஆமாம் சார்… அவளுக்கு என்ன ஆச்சுனு தெரியலை. அதனால பஸ் விபத்துள்ளானதை நான் மாமாவுக்கு சொல்லிட்டேன்… ஏன்னா போலீஸ் கேஸானதால மீரா என்ன ஆனாள்னு அப்பாங்கற முறைல அவர்தான் விசாரிக்க முடியும்."