அவனும் சும்மா இருக்கவில்லை. அவளிடம் பேசிக்கொண்டே சமையல் அறையில் அவளுக்கு உதவியாக இருந்தான்.
மாதவன் சென்ற பிறகு இருவரும் பேசிக்கொண்டு அமர்ந்தனர்.
“அக்கா. உண்மையிலேயே நீங்க மகிழ்ச்சியா இருக்கீங்களா?”
திடீரென்று பரத் கேட்ட கேள்வியில் அவள் திடுக்கிட்டாள்.
“என்ன பரத்? ஏன் இப்படி கேட்கிறே?” தன் திகைப்பை மறைத்தவளாய் அவனிடம் கேட்டாள்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் எதிர் கேள்வி கேட்கும்போதே நீங்க எதையோ மறைக்கிற மாதிரி தெரியுதுக்கா.”
“அப்படி எல்லாம் ஒன்னுமில்லை பரத்.”
“அப்படி இல்லைன்னா சந்தோசம்தான்க்கா. அத்தான் பாவம்க்கா. அவரோட வாழ்க்கை நல்லாருக்கனும்னு நினைக்கிறேன். அதனால்தான் கேட்டேன்க்கா. நீங்களும் நல்லவங்களா இருக்கீங்க?”
“எதுக்கு உங்கத்தானை பாவம்னு சொல்றே? அவர் எதில் குறைஞ்சுபோயிட்டார்?”
“பாவம்தான்க்கா. அவரோட அம்மா அப்பா அவரோட சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க.”
“அவர்தான் சித்தப்பாவை தன்னோட அப்பா மாதிரின்னு சொன்னாரே. உங்க குடும்பம் துணையிருக்கையில் அவர் எப்படி பாவம்?”
கணவனைப் பற்றி அறிந்து கொள்ளும் எண்ணத்தில் கேள்வியை வீசினாள். அப்போதுதானே அவனது நடவடிக்கைக்கு காரணம் புரியும்?
அவளுக்கு தன்னுடைய வாழ்வை இழக்க விருப்பமில்லை.
“அக்கா. அத்தான் அப்படித்தான் சொல்வார். ஆனால் எங்கம்மா அவருக்கு ஒரு நல்ல அம்மாவா இருந்து வளர்க்கலை. அத்தான் ரொம்ப சிரமப்பட்டிருக்கார்.”
அவளுக்குத் தன் கணவனின் இளவயதை நினைத்துப் பார்க்கும்போது பாவமாக இருந்தது.
பெற்றோர் இல்லாத சமயத்தில் இருந்த உறவுகளும் சரியாக ஆதரிக்கவில்லை என்றால் பாவம்?
“எல்லாத்தையும் விட அத்தான் பன்னிரண்டாவது படிக்கும்போது சரியா பரிட்சை சமயத்தில் அத்தானுக்கு அம்மை போட்டுடுச்சு. அத்தானுக்கு டாக்டருக்குப் படிக்கனும்னு சின்ன வயசில் இருந்தே ஆசை. அத்தானுக்கு அம்மை போட்டுடுச்சுன்னு ஹெட்மாஸ்டர் அவரை பரிட்சை எழுத வரவேண்டாம்னு சொல்லிட்டாராம். அவர் போனால் மத்தவங்களுக்கும் அம்மை வந்துடும்னு சொல்லிட்டார். நல்லா படிக்கிற பையன். அவனோட வாழ்க்கையை கெடுத்துராதீங்கன்னு அப்பாதான் ஹெட்மாஸ்டர்கிட்ட கெஞ்சி அவர் பரிட்சை எழுத அனுமதி வாங்கினாராம். அப்ப அத்தானுக்கு ரொம்ப தொல்லையா இருந்துச்சு. அதோடவே பரிட்சை எழுதப் போனார். அப்பாதான் அவரை