வண்டியில் வச்சு அழைச்சுட்டுப்போனார். அம்மா கூட அம்மை வந்தவன் கூட எப்ப பாரு இருக்கீங்க. அதனால் நம்ம புள்ளைகளுக்கும் ஒட்டிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு சண்டை போட்டாங்க. அதனால் அத்தானுக்கு சரியாகற வரைக்கும் அப்பா எங்க பக்கம் வரலை. படிச்சதை கூட அவரால் திருப்பிப்பார்க்க முடியலையாம். அப்பா அவரோட தலைமாட்டில் உட்கார்ந்து பாடத்தை படிப்பாராம். அதை காதில் வாங்கிக்கொண்டு போய் பரிட்சை எழுதியிருக்கார். ஆனால் மார்க் குறைஞ்சுடுச்சு. அவர் ஆசைப்பட்ட டாக்டர் படிப்பை படிக்க முடியலை. கொஞ்ச மார்க்கில் மெரிட்டில் சீட் கிடைக்கிறது தட்டிப்போச்சு. பணம் கொடுத்து படிக்கிற அளவுக்கு அத்தானுக்கும் வசதியில்லை. எங்கப்பாக்கிட்டயும் பணம் இல்லை. அப்புறம்தான் அத்தான் இந்த பிசியோதெரபி படிப்பில் சேர்ந்திருக்கார்.”
அவன் சொல்லச் சொல்ல மகாலட்சுமி வேதனைப்பட்டாள். கணவன் இளவயதில் எத்தனை சிரமப்பட்டிருக்கிறான்.
இந்த நேரத்தில் அவளுக்கு ராஜதுரையின் மீதான மரியாதை அதிகமானது. அன்று மாலை மாதவன் வந்த போது அவன் முகத்தை ஆராய்ச்சியுடன் பார்த்தாள். அம்மை ரொம்ப தீவிரமாக இருந்ததாமே. அதன் அடையாளம் ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தாள்.
“என்ன பார்த்துக்கிட்டு நிற்கிறே?” என்றான் அதட்டலான குரலில்.
‘இவருக்கு அதட்டாமல் பேசத்தெரியாதா?’
அவனுக்குப் பதில் கூறாமல் பேசாமல் அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டாள்.
“அத்தான். நான் வந்ததே உங்களை ஊருக்கு அழைச்சுட்டுப் போறதுக்குதான். நான் வரும்போதே அப்பா சொல்லித்தான் அனுப்பிச்சாங்க. நம்ம குலதெய்வம் கோயில்ல பூஜை.”
“போகலாம் பரத். நாளைக்கு காலையில் போகலாம்.”
மாதவன் உள்ளே சென்றுவிட்டான்.
“அக்கா. நீங்க கிராமத்துக்கு வந்திருக்கீங்களா?”
“சின்ன வயசில் வந்திருக்கேனாம். எனக்கு ஞாபகம் இல்லை பரத்.”
“ரொம்ப நல்லாருக்கும். அங்கே ஒரு வாரமாச்சும் தங்கனும். அதற்கு தயாரா வாங்க.”
“நீ ஊரில் இருப்பியா?”
“நான் இல்லாமலா?”
மாதவன் ஒரு காரை வாடகைக்கு அமர்த்தினான். செல்வியும் தன் இரு குழந்தைகளுடன் அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.
அவள் கணவன் வரவில்லை. வேலை இருப்பதால் பூஜை அன்று வந்து சேர்ந்து கொள்வதாக கூறிவிட்டானாம்.
குழந்தைகளோடு அவள் இயல்பாய் பழகுவதை பரத் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு வந்தான்.