கலகலப்புடன் ஊர் சென்று சேர்ந்தனர்.
ராஜசேரின் வீடு அந்தக் காலத்தில் கட்டிய வீடுதான். ஓட்டு வீடு. அதெல்லாம் மகாலட்சுமிக்கு பெரிதாகத் தோன்றவில்லை. இது அவள் கணவன் வளர்ந்த வீடு. அது மட்டும்தான் அவள் மனதில் இருந்தது.
ராஜசேகர் வாஞ்சையுடன் அவளை வரவேற்றார். அவருடைய மனைவி நீலாவதி அத்தனை இனிமையாய் பழகவில்லை. அதை அவள் முகத்தைப் பார்த்தபோதே மகாலட்சுமி புரிந்துகொண்டாள்.
பெரிய ஓட்டு வீடாக இருந்தாலும் மாதவன் அந்த வீட்டை ஒட்டி இருந்த சிறிய அறையில் தான் வளர்ந்தது எல்லாம். அங்கேயே தான் தங்கிக் கொள்வதாகக் கூறிவிட்டான். ராஜசேகர் சொன்னதையும் ஏற்கவில்லை.
“மாதவா. ஏன்ப்பா இப்படி அடம் பிடிக்கிறே? அந்தப் பொண்ணு வசதியா வளர்ந்த பொண்ணு.”
“என்னோட சம்பாத்தியத்தில் தான் வாழனும்னு நான் ஏற்கனவே சொல்லித்தானே மாமா கட்டிக்கிட்டேன்.”
“அதுதான் சம்மதிச்சு கல்யாணம் பண்ணிக்கொடுத்திருக்காங்களே. அந்தப் பொண்ணும் அப்படித்தானே நடந்துக்குது. இங்கே விருந்தாளியா வந்த பொண்ணை வசதிக்குறைவா நடத்த எனக்கு ஒரு மாதிரி இருக்குப்பா.”
“அவ எப்படி மாமா விருந்தாளியா இருப்பா? என்னோட பொண்டாட்டியா வந்திருக்கா. அப்ப எனக்கு ஏத்த மாதிரிதான் நடந்துக்கனும்.” என்று கண்டிப்புடன் பேசும் மருமகனை என்ன செய்வதென்று புரியாமல் பார்த்தார் ராஜசேகர்.
அந்த அறை மிகவும் சிறியது. அவன் சிறியவனாக இருந்த போது அவன் மட்டுமாக இருந்த இடத்தில் இப்போது வளர்ந்த இருவர் எப்படி இருக்க முடியும்?
ஆனால் மகாலட்சுமி ராஜசேகரை சமாதானப்படுத்தினாள்.
இரவு உணவுக்குப் பின் அந்த அறைக்குள் வந்த பிறகுதான் அவர் ஏன் மாதவனை தடுத்தார் என்று புரிந்தது.
அந்த அறையில் ஒரு பாயை விரித்துப் படுக்கலாம். அந்தளவிற்குதான் இடம் இருந்தது. பரத் ஒரு மின்விசிறியை எடுத்து வந்து பொருத்தினான்.
“என்ன பார்க்கிறே? மகாராணிக்கு கட்டில் இருந்தால்தான் தூக்கம் வருமோ?”
“நான் ஒன்னும் அப்படி சொல்லலையே.” என்றவாறு அந்தப் பாயில் ஒரு ஓரமாய் படுத்தாள். அவன் மறுபக்கம் படுத்தான்.
கொஞ்சம் அசந்து உறங்கினாலும் அவன் மீது அவள் கை படத்தான் செய்யும். வேண்டுமென்றே அவன் அவள் மீது ஏதாவது பழியைப் போடலாம்.
வளரும்............