எப்படி அவரால் இப்படி எல்லாம் பேச முடிகிறது? இன்னொரு திருமணமா? ஒரு திருமணத்திலேயே இவர் வாழ்க்கையை வெறுக்கடித்த பிறகு என்னால் இன்னொரு திருமணத்தைப் பற்றி எல்லாம் நினைக்க முடியுமா?
இவரை அந்தளவிற்கு செல்ல விட்டால்தானே? என்னை விட்டுவிட்டு இன்னொரு வாழ்க்கை வாழ்ந்துவிடுவாரா? மனதினுள் ஒரு பிடிவாதம் வந்து ஒட்டிக்கொண்டது.
ஏதோ தவறு செய்துவிட்டதாக கூறி தண்டனை கொடுக்க முயல்கிறவர் என்ன தப்பு செய்தேன் என்றும் சொல்ல வேண்டியதுதானே? அப்படி சொல்வதற்கு ஒன்றுமில்லாமல் போனதால்தானே இவர் வெளிப்படையாக கூறாமல் யோசித்துப் பார் என்று சமாளிக்கிறார்.
அன்று அவர் காது பட அவரை வேண்டாம் என்றதற்காக பழிவாங்கவென்று இப்படி எல்லாம் பேசுகிறார்.
இல்லை. இதிலும் ஏதோ ஒன்று இடிக்கிறது. இவர் அதற்கு முன்பே அவருடைய ஜாதகத்தை என்னுடைய ஜாதகத்திற்குப் பொருத்தமாய் எழுதியாகதானே அந்த ஜாதகக்காரர் கூறினார்.
அவன் அதன் பிறகு அவளைத் தொந்தரவு செய்யவில்லை. ஆனாலும் அவளால் நிம்மதியாக உறங்கமுடியவில்லை. ஏன் அவன் இவ்வாறெல்லாம் நடந்துகொள்கிறான்? தான் எப்போதேனும் அவனைக் காயப்படுத்தியிருக்கிறோமா? என்று யோசித்துப் பார்த்தாள். பதில்தான் கிடைக்கவில்லை.
எப்படியும் அவனிடம் இருந்து வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு உறங்க முயன்றாள்.
அவனுக்கு எப்படி தன்னுடைய ஜாதகத்தில் கோளாறு இருப்பது தெரிந்தது? அவளுடைய தாத்தா கந்தசாமிக்கு அடிபட்டபோது அவன்தானே வைத்தியம் பார்த்திருக்கிறான். அப்போது வந்து செல்லும்போது தன்னுடைய ஜாதகம் பற்றி தெரிய வந்திருக்கும்.
நாட்கள் சலிப்புடன் விரைந்தன.
மகாலட்சுமி இங்கே வந்த பிறகு விதவிதமான மனிதர்களை சந்தித்துவிட்டாள். அதுவும் செல்வி செய்யும் அழிச்சாட்டியத்திற்கு அளவேயில்லை. அவள் சமைத்ததை குறை கூறிக்கொண்டே எடுத்துச்செல்வது வாடிக்கையாகிவிட்டது.
அவள் செயல் எரிச்சலை உண்டாக்கினாலும் அவளுடைய குழந்தைகளை மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்துவிட்டது. பாவம் அந்தக் குழந்தைகள் என்றுதான் சில நேரங்களில் அவளுக்குத் தோன்றியது. பிள்ளைகளை வளர்க்கத் தெரியாமல் வளர்த்திருந்தாள். மூத்தவள் ஈஸ்வரி எப்போதும் பிடிவாதம் பிடிப்பாள். அவள் கேட்பதை கொடுக்கவில்லை என்றால் உடனே அழ ஆரம்பித்துவிடுவாள். குழந்தையின் அழுகையை நிறுத்தாமல் மேலும் அழவிடும் செல்வியின் செயலைக் கண்டு கோபம் வரும். இருந்தாலும் காட்ட முடியாது. செல்வியின் இரண்டாவது பெண் குழந்தை சங்கரி