செய்கிறார்கள் என்று பார்ப்பதில்லை. இப்போது எல்லோருமே குழந்தைகளை குழந்தைகளாகப் பார்ப்பதில்லை. செய்தித்தாளில் படிக்கும்போதும், தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்கும் போதும் மனம் பகீரென்கிறது. பெண் குழந்தைகளுக்கு யாரோ முகம் தெரியாதவர்களால் வரும் ஆபத்தை விட பழகியவர்களால்தான் அதிகம் ஆபத்து வருகிறது என்று நடப்பதை எல்லாம் கேள்விப்பட்டும் அவள் குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருப்பது கண்டு மகாலட்சுமிக்கு கோபம் வரும். அவள் எடுத்துக்கூறினாலும் அவள் பத்தாம்பசலித்தனமாக இருப்பதாக கூறி அலட்சியப்படுத்திவிடுவாள்.
இப்போது இதோ இங்கே ஊருக்கு வந்த பிறகும் அவள் படுத்தும் பாட்டை காலையில் இருந்து பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாள்.
என்னவோ அவள் பிறந்ததில் இருந்தே அவள் இப்போது இருக்கும் வீட்டில்தான் இருந்தது மாதிரி இருந்தது அவள் போக்கு.
பரத் கூட கிண்டல் செய்தான்.
“அக்கா. பாருங்கக்கா. நீங்க அரண்மனை மாதிரி வீட்டில் பிறந்து வளர்ந்தவங்க. நீங்க ஏதாவது குறை சொன்னால் கூட பரவாயில்லை. அவள் இங்கேதான் பிறந்து வளர்ந்தாள். என்னமோ புதுசா பார்க்கிற மாதிரி பேசறா.”
என்று அவள் காதில் கிசுகிசுத்தான். சத்தமாகப் பேசினால் அவன் அன்னையிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டியிருக்குமாம். அதையும் அவன் மூக்கால் அழுவது மாதிரியே நடித்துக் காண்பித்துக்கூறவும் மகாலட்சுமிக்கு சிரிப்பு வந்தது.
அது என்னவோ தெரியவில்லை. பரத்தின் தாய் நீலாவதி தன்னுடைய மகளுக்கு அதிகமாக செல்லம் கொடுக்கிறாள் என்பதை அவள் பார்த்த உடனே தெரிந்து கொண்டாள். அவளை ஒன்றுகூட தவறாக பரத் சொல்லிவிட்டால் அவனைத்தான் திட்டுகிறாள்.
மகள் தவறு செய்யும்போது அவளைக் கண்டித்தால்தானே அவள் தன் தவறைத் திருத்திக்கொள்வாள். அவள் ஒன்றும் சின்னப்பெண் அல்லவே. ஒரு குடும்பத்தலைவி. இரண்டு குழந்தைகளுக்குத் தாய். அவள் இன்னும் சிறு குழந்தை போன்று நடந்து கொண்டால் அது அவளது குடும்பத்தை தானே பாதிக்கும்.
இதை ஏன் நீலாவதி புரிந்துகொள்ளவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை.
ஆனால் ராஜசேகருக்கு நேராக செல்வி அடக்கி வாசிக்கிறாள்.
பல்வேறு நினைவுகளும் அவளை ஆக்கிரமிக்க ஒருவழியாக மகாலட்சுமி உறங்க ஆரம்பித்தாள். ஆனால் சரியான உறக்கம் இல்லை. இருந்தாலும் காலையில் அவள் வழக்கமாக எழும் நேரத்துக்கு எழுந்துவிட்டாள். அருகில் மாதவனைக் காணவில்லை.
எழுந்து அறையைவிட்டு வெளியில் சென்றாள்.