“என்னம்மா நேரமே எழுந்துட்டியா?” என்று பாசத்துடன் ராஜசேகர் கேட்டார்.
“ஆமாம் சித்தப்பா.”
“என்னம்மா? அந்த அறையில் படுத்திருக்கிறது உனக்கு வசதியா இருந்துச்சா? புது இடம் வேற. ஒழுங்கா தூங்குனியா?”
“நல்லா தூங்கினேன் சித்தப்பா.” அவள் கூறியதில் உண்மையும் இருக்கத்தான் செய்தது. உறங்குவதற்கு முன்பு என்னென்னவோ சிந்தனைகள் அவள் மனதில் வலம் வந்திருந்தாலும், அதன் பிறகு அவள் நன்றாகத்தான் உறங்கியிருந்தாள்.
“என்னவோ போம்மா. உனக்கு இப்படி எல்லாம் இருந்து பழக்கம் இல்லைன்னு நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், நீ இதை எல்லாம் பழகிக்கனும்னு அடம் பிடிக்கிறான் அந்தப் பயல். ரொம்பப் பிடிவாதக்காரன்மா. நீதான் சமாளிக்கப் பழகிக்கனும்.”
அவள் அமைதியாக புன்னகைத்தாள். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவனைப் புரிந்துகொண்டால்தானே அவள் சமாளிக்க முடியும்? இன்னும் புரியாத புதிராகத்தானே இருக்கிறான்.
“போம்மா. போய் முகம் கழுவிட்டு காபி குடி.”
“சரிங்க சித்தப்பா.”
அவள் வீட்டின் பின்பக்கம் சென்றாள்.
“என்னக்கா? நல்லா தூங்கினீங்களா?”
“ம். ஓகே. பரத்.”
“காபி குடிச்சீங்களா?”
“இல்ல. நான் பிரஷ் பண்ணனும். நான் பிரஷ் எடுத்து வைக்க மறந்துட்டேன். இங்கே கடை இப்ப திறந்திருக்குமா?”
“இப்போவா?” என்று பரத் யோசிக்கும்போதே அங்கே வந்த மாதவன் அவள் கையில் வேப்பங்குச்சியை வைத்தான்.
“இந்தா இதை இந்த மாதிரி கடிச்சுக்கிட்டு நல்லா பல் விளக்கு. பிரஷ் எல்லாம் தேடிக்கிட்டு இருக்க முடியாது. இதுதான் ஆரோக்கியமான பழக்கமும் கூட.” என்று அவளிடம் வேப்பங்குச்சியை எப்படி பயன்படுத்துவது என்று செய்து காண்பித்தான்.
அவள் அதை வாயில் வைத்துக் கடிக்கும்போதே கசப்பில் முகம் சுளித்தாள். இருந்தாலும் வேறு வழியில்லை. அதையே பிரஷ்ஷாக பயன்படுத்தி பல் துலக்க ஆரம்பித்தாள். அதுவும் புது அனுபவமாகத்தான் இருந்தது.
“நான், அத்தான் எல்லாம் எப்ப இங்கே இருந்தாலும் இன்னும் வேப்பங்குச்சிதான்