தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 13 - ஜெபமலர்
குயிலி ஆசிர்வாதம் தாத்தா உடன் அங்கிருந்த குகையில் தஞ்சம் புகுந்தாள். ஆனால் மனமோ திக் திக் என்று அடித்துக்கொண்டது. இத்தனை ஆபத்து என்னை சுற்றி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தவள் எப்படியாவது காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று அந்த பெரிய ஃபைலை புரட்டினாள்.
பார்ப்பதற்கு பெரிய அளவில் இருந்தாலும் அதனுள்ளே 4 5 துண்டுக் காகிதங்கள் மட்டுமே இருந்தது. அதைப் புரட்டிப் பார்த்தால் அதில் ஒரு கடிதம் இருந்தது. கடிதத்தைப் பிரித்துப் பார்க்க அது அவளுக்காக அவளுடைய தாத்தா எழுதியது என்று அறிந்து கொண்டாள். கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள்.
அன்புள்ள பூங்குழலி,
உன்னுடைய உண்மையான பெயர் குயிலி. உன் அம்மாவும் அப்பாவும் ஒரு சயின்டிஸ்ட். ஏதோ ஒரு பெரிய ஆபத்து உன் குடும்பத்தை சூழ்ந்து இருப்பதால் உன் பெற்றோர் உன்னை தனியாக வேறு இடத்துக்கு அனுப்புவதற்கான தயாராகி விட்டார்கள் என்பதை அவர்கள் அனுப்பிய சிறு குறிப்புகள் மூலம் அறிந்து கொண்டேன். ஆனால் உன் தந்தையும் தாயும் பற்றி எனக்கு முழு விவரமும் தெரியவில்லை. ஆனால் உனக்கு பின்னால் ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது என்று மட்டும் எனக்கு தெரியும். நீ இந்த கடிதத்தை இப்பொழுது படிக்கிறாய் என்றால் உன் கடந்த காலம் சிலவற்றை அறிந்து கொண்டாய் என்று அர்த்தம். அதோடு அந்த ஆபத்தானது உன்னை நெருங்கி வந்துவிட்டது என்றும் அர்த்தம். இனிமேல் கவனமாக இருக்கவேண்டும். உனக்கும் எனக்கும் ரத்த சம்பந்தமான எந்த உறவும் இல்லை. ஆனாலும் உன்னை என் சொந்த பேத்தியாக தான் நான் வளர்த்தேன். உனக்கு தேவையான அனைத்து காரியங்களையும் கற்றுக் கொடுத்திருக்கிறேன். நீ மிகவும் புத்திசாலி. அதனால்தான் இப்பொழுது இந்த கடிதம் உன் கையில் இருக்கிறது. நீ இன்னும் செய்ய வேண்டிய பயணம் வெகு தூரம். இன்னும் கவனமாக முன் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். உன் தாய் தந்தையின் இலட்சியத்தை நீ காப்பற்ற வேண்டும். நீ எப்போதும் கவனமாக இரு. கடவுள் எப்பொழுதும் நம்முடன் இருப்பார். எந்த முடிவு எடுத்தாலும் நன்கு யோசித்து முடிவு எடு. நீ எடுக்க வேண்டிய ஒவ்வொரு முடிவுக்கும் தேவையான விதையை உன் இளம் வயதிலேயே நான் உனக்குள் விதைத்து விட்டேன். நீ யோசிக்க யோசிக்க உனக்கு நிச்சயம் விடை கிடைக்கும். நீ சாதிப்பாய் என்று நான் நம்புகிறேன் .
என்றும் பிரியமுடன்
உன் தாத்தா
என்று அந்த கடிதம் நிறைவு பெற்று இருந்தது.