தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 01 - பூர்ணிமா செண்பகமூர்த்தி
முன்னுரை:
வாழ்க்கையில் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்பது எல்லாருக்கும் மிகவும் சாதாரணம். படிப்பைத் தவிர வேறொன்றும் என் நினைவில் இல்லை, நான் காதல் வசப்படமாட்டேன் என்னும் மனவுறுதி கொண்ட ரம்யா என்ற இளம்பெண்ணும், தனக்கே அவள் உரிமையானவள் என்னும் கண்மூடித்தனமான காதல் கொண்ட தினேஷ் என்ற இளைஞனும் அவர்களின் கல்லூரி நாட்களில் நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் “இது ஒரு காதல் கதை” . முதல் பகுதியில் சந்தர்ப்பவசத்தால் அவர்களின் காதல் இருவரும் சொல்வதற்குள் பிரிந்து விட்டது போல் அமைந்துவிட்டது. ஆனால் அவர்கள் இருவரும் காதலை ஒத்துக் கொண்டு காதலித்து இருந்தால் அவர்களின் கல்லூரிக்காலம் எப்படி இருந்திருக்கும் என்பதே இந்த இரண்டாவது பாகம். கதையில் வரும் பெயர்களும், சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.
“இதோ ஒரு காதல் கதை -முதல் பாகம்” கதைச் சுருக்கம்:
ரம்யா பெண்கள் மட்டும் பயிலும் பள்ளியில் படித்தவள். இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்கிற அவளின் ஆசைக்காக அவள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய படிப்பில் சேர்த்துவிடும் அப்பா. இருபாலர் பயிலும் கல்லூரி என்பதால் ஆண் மாணவர்களிடம் பேசக்கூடாது என்கிற அளவு கண்டிப்பான அம்மா. தனது லட்சியத்தில் எந்த கவனச்சிதறலும் வரக்கூடாது என்னும் ரம்யாவைக் கல்லூரியில் கண்டதும் காதல் கொள்கிறான் தினேஷ். அவளின் மனத்தை வெல்ல அவள் செல்லுமிடம் எல்லாம் சென்று, அவளிடம் பேச முயற்சி செய்து தோல்வியுற்றுக் கொண்டே இருக்கிறான். ரம்யாவின் பள்ளித் தோழி சத்யா கலைக்கல்லூரி ஒன்றில் பயில்கிறாள். நேரிலோ இல்லை போனிலோ எப்படியேனும் இருவரும் தினமும் பேசிவிடுவார்கள். கண்மணி ரம்யாவின் கல்லூரித் தோழி. தினேஷின் நண்பர்கள் ராபின், கார்த்திக். கண்மணியும் கார்த்திக்கும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். நட்பு காதலாகி இப்போது வீட்டில் தெரிந்து இருவரின் பெற்றோர்களும் மிகுந்த கண்டிப்புடன் நடத்துமளவு நிலைமையில் இருப்பவர்கள். ராபின் ரம்யாவின் அண்ணன் முறை உறவினன். குடும்பத்தில் பிரச்சினை ஏற்படவிடாமல் ரம்யாவை தினேஷிடம் இருந்து விலக்கி வைப்பதே அவன் நோக்கம். தினேஷுக்கு ரம்யாவிடம் நேரில் காதலைச் சொல்ல பயம். அவளுடைய வீட்டுக்குத் தொலைபேசியில் அழைப்பதும், பேசத் தயங்குவதுமாய் இருக்கின்றான். கல்லூரியில் நடக்கும் சம்பவங்கள் அமைதியான குளம் போலிருந்த ரம்யாவின் உள்ளத்திலும் கல்லெறிந்து சலன அலைகளை உருவாக்குகிறது. இந்நிலையில்,முதல் செமெஸ்டர் வகுப்புகள் நிறைவடையும் இறுதி நாள் வருகிறது. இனி..