தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 14 - ஜெபமலர்
ராமுவை கண்டு பிடிக்க முடியவில்லை என்ற செய்தியைக் கேட்டதும் பிரதாபனின் மூளை எச்சரிக்கை மணி அடித்தது. எங்கோ தவறு நடக்கிறது என்று யோசித்தவன் உடனடியாக சத்யாவிற்கு அழைத்தான்.
சொல்லுங்க அண்ணா...
சத்யா... உடனே தேடியும் ராமு கிடைக்கவில்லை என்றால் இதற்குப் பின்னால் ஏதோ காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன்... ஒருவேளை ராகவ்விற்கு உண்மை தெரிந்து இருக்குமோ என்றான்...
இல்லை அண்ணா அதற்கு வாய்ப்பே இல்லை... படிப்பை முடித்துவிட்டு 4 வருடம் கழித்து இப்போது தான் இந்தியா வந்து இருக்கிறான். அவன் இந்தியா வந்த பிறகு குயிலியை பார்க்க மட்டும்தான் வெளியே சென்றான். திரும்ப வீட்டிற்கு வந்த பிறகு வெளியே எங்கேயும் செல்லவில்லை. நம் ஆட்கள் அவனை கண்காணித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். அவன் எங்கேயும் செல்லவில்லை.... யாரையும் தொடர்பு கொள்ளவில்லை... அப்படி இருக்கும்போது எப்படி அவன் காரணமாக இருக்க முடியும் என்றான்.
ஒருவேளை நம் கவனத்தை திருப்புவதற்காக வீட்டிற்குள்ளே இருந்துகொண்டு போன் மூலமாக ஆட்களை வைத்து ஏதாவது செய்வானோ...
அதற்கு வாய்ப்பில்லை அண்ணா... நம் இடத்திலிருந்து அதாவது நமது வீட்டிலிருந்து யார் யாருக்கு போன் செய்தாலும் அதை கண்காணிப்பதற்காக நம் ஆட்களை வைத்து இருக்கிறேன்... 24 மணி நேரமும் கணினி முன்பாக உட்கார்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு தெரியாமல் எந்த ஒரு அழைப்பும் செல்ல முடியாது. அதனால் ராகவ் யாருக்கும் அழைக்கவில்லை. இதற்கும் ராகவ்விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
ம்ம்ம்... எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.
சரி அண்ணா...
அந்தக்குயிலி கிராமத்திற்குப் போய் இருக்கிறாள்... ஆனால் அதை கவனிக்காமல் விட்டுவிட்டீர்களே.
அப்படி இல்லை அண்ணா... கண்காணித்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அவள் எப்படியோ தப்பி விட்டாள். இன்னும் அவளைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த கிராமத்தை சுற்றி நாலாபுறமும் நம் ஆட்கள் நிற்கிறார்கள். அதுபோக நம்மாட்கள் சந்து பொந்து விடாமல் அவளை தேட ஆரம்பித்துவிட்டார்கள். சீக்கிரமாக அவளை கண்டு பிடித்து விடுவார்கள்.