ஆமா ஆமா... இது உலகத்தில் உள்ள யாரோ ஒருத்தர் எழுதியது தான்.
அது சரி... பூலோகத்தில் எழுதியது உன் கையில் இந்த வானுலகத்தில் எப்படி வந்தது.
இப்போதெல்லாம் 7 கண்டம் தாண்டி... ஏழு மலை தாண்டி... ஏழு கடல் தாண்டி எல்லா பக்கமும் பரவத் தொடங்கிவிட்ட இந்த இன்டர்நெட் உதவியால்தான் வந்து கிடைத்தது.
அப்படியா....
ஆமா.... சரி நீங்களும் படித்து பார்க்கிறீர்களா என்றது குட்டி டுவிங்கிள்.
சரி... அதை நாங்கள் எப்படி படிப்பது என்றது பெரிய ட்விங்கிள். இதுதான் அந்த வலைதளத்தின் அட்ரஸ் என்று சொல்ல சரி என்று தலையை ஆட்டிக்கொண்டே தங்களுடைய டேபில் அந்த வெப்சைட்டை ஓபன் செய்து படிக்க துவங்கியது மற்ற இரண்டு டுவிங்கிளும்.
படித்துக்கொண்டு இருந்த ஆர்வத்தில் ஜனனி சந்தியா பேசியதை கவனிக்க மறந்து விட்டது அந்த விண்மீன்கள். ( சரி சரி வாங்க நாம போய் கவனிக்கலாம் ....அவர்கள் இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று.)
கோபமாக அமர்ந்து கொண்ட சந்தியாவின் அருகில் அமர்ந்து கொண்ட ஜனனி சந்தியாவின் கைகளை பிடித்து தன் மடியில் வைத்துக் கொண்டு அவளது விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டு பேசத் தொடங்கினாள் ஜனனி.
சந்தியா நீ இல்லை என்றால் நான் இப்போது உயிரோடு இருப்பேனா என்று தெரியவில்லை. அப்படியே உயிரோடு இருந்தாலும் ஏதாவது ஒரு மனநிலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்து இருப்பேன் என்று சொல்லும்போதே அவள் குரல் மாறுவதை உணர்ந்தாள் சந்தியா.
ஜனனியின் மனநிலையை மாற்ற விரும்பிய சந்தியா தன் விரல்களை இன்னும் அவள் விரல்களோடு இறுக்கிக் கொண்டு இந்த ஜனனி ரொம்ப போல்ட் தெரியுமா எங்க ஜனனி... ஜனனியை நாங்கள் எல்லாம் ஆர்ஜே என்றுதான் சொல்லுவோம். ஆர்ஜே என்றால் என்ன என்று தெரியுமா உனக்கு... ரவுடி ஜனனி என்று சொல்லிவிட்டு அவள் கன்னங்களை பிடித்து ஆட்டினாள் சந்தியா.
பொங்கி வந்த நீரை விழிகளுக்குள் அடைத்துக் கொண்டு தன் உதடுகளில் ஒரு புன்னகையை வெளிப்படுத்த முயன்று தோற்றுப் போனாள் ஜனனி. நீர் விழியைத் தாண்டி கன்னங்களை தழுவி வந்து அவளது விரல்களில் முத்தமிட்டது.
நானும் சாதாரணமாக இருந்தால் என் ஒரே உயிரை இழந்து இருக்க மாட்டேன். ரவுடி மாதிரி நடந்து கொண்டதால்தான் நானே என்னுடைய இந்த கையால் என் உயிரை அழித்து விட்டேன் என்று சொல்லும் போதே அவளது குரல் உடைந்து இருந்தது.