பிள்ளைகளுக்கு தந்தாள். வழக்கம்போல எடியை வெளியே அழைத்து செல்ல அனுமதி கேட்டாள்.
"ஜாக்கிரதை ரேச்சல்.. அவன் இப்போதுதான் குணமாகி இருக்கிறான்" என்ற எச்சரிக்கையுடன் விடுதி காப்பாளர் அவளுக்கு அனுமதி தந்தார்.
சந்தோஷமாக அவளுடன் வண்டியில் அமர்ந்து எடி நிறைய கதைகளை பேசிக் கொண்டு வந்தான்.
"டேச்சல்… எங்க விடுதியில பேய் இருக்குனு ஆதி சொன்னான்."
"அவன் பார்த்தானாக்கும்…பேய்ங்கறது சும்மா.. உன்னை பயமுறுத்த சொல்லி இருப்பான்." வண்டியை ஓட்டிக் கொண்டு ரேச்சல் சொன்னாள்.
"இல்லை அவன் நிஜமா பார்த்தானாம். அது அவனை பார்த்து அழுதுச்சாம்"
"பேய்னா கொக்கே பிக்கேனு சிரிக்கும்டா.. அழாது.."
"ஐயோ அது அழுதுச்சாம். ஏன்னா அது அவங்க ஸ்கூல் பரிட்சைல ஃபெயிலாயிடுச்சாம்… அந்த கணக்கு பரிட்சை ரொம்ப கஷ்டமாம்… அந்த பேய் நைட்லாம் கண்ணு முழுச்சு படிச்சும் புரியலயாம்."
"மாட்டிகிட்டியா… பேய் நைட்லதானடா ட்யூட்டி பார்க்கும். அப்புறம் கண்ணு முழுச்சுதாம்… கணக்கு போட்டுச்சாம்னு கதை விடற"
"ஹா நீ மாட்டிகிட்டியா… பேய் இருக்குன்னு இப்ப ஒத்துக்கறியே"
"ஏய்… நான் ஒத்துக்கலடா… பேயோட கேரக்டர்னு ஒரு டிசைன் இருக்கும்ல அதை சொன்னேன்…"
"இப்ப நீ ஒப்புக்குவ… அங்க பார் பேய் தலைமுடியை விரிச்சு போட்டுகிட்டு வருது" என்று எடி சுட்டிகாட்டினான். அது கல்பியாச்சே!
"ப்ச்… கல்பிய பேய்னு சொல்லாத."
"அச்சோ… நான் ரெஸ்டுல இருந்த சமயத்துல நீ ஃப்ரெண்டை மாத்திகிட்டியா…." எடி சிணுங்கினான்.
"அப்படி இல்லடா… நமக்கு அவளை பத்தி தெரியலை. அவங்க அம்மா கேன்சர் வந்து இறந்துட்டாங்களாம் அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்க வாங்கின கடனை அவள்தான் கஷ்டபட்டு அடைக்கிறாள். பாவம் அவளுக்கு உதவி செய்ய யாரும் இல்லை" அவனிடம் சொல்லிக் கொண்டே வண்டியை நிறுத்தினாள்.
"நீ வண்டிலேயே இரு. நான் அவள்ட்ட பேசிட்டு வர்றேன்" என்று கல்பியை நோக்கி நடந்தாள்.
"கல்பி… என்னாச்சு என்ன விஷயம்? எதுக்கு இப்படி ஓடி வர்ற"
"உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்பா."