அணைத்துக் கொண்டார்.
"உன் நம்பிக்கை வீண் போகவில்லை… மீரா கிடைத்து விட்டாள். இறைவனுக்கு நன்றி. அந்த பிஞ்சு குழந்தை தாயில்லாமல் ஆகி விட்டாளே என்று கவலை பட்டு கொண்டு இருந்தேன்...நல்ல செய்தியாக கிடைத்து விட்டது."
அவர்கள் பக்கத்து வீட்டுக்கு சென்றனர். சத்யனின் கண்கள் மீராவை தேடியது…. அவள் எங்கே?
அதற்குள் ஜெமி மூலமாக விவரத்தை தெரிந்து கொண்ட ஷீலா ஆச்சரியப்பட்டார். சத்யனை பார்க்கவும்…
"என்னை மன்னித்து விடுங்கள் தம்பி. நீங்கள் சரியாகதான் நடந்து கொண்டீர்கள். நான்தான் தவறாக புரிந்து கொண்டேன். இந்த விவரம் எதுவும் எனக்கு தெரியாது…. உங்கள் மனைவியை பிரிந்து எவ்வளவு வேதனைபட்டிருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது. மீராவும் தங்கமான பெண்… அவளை இழக்க யாருக்குமே மனம் வராது… " என்று பேசினார்.
"பரவாயில்லை டாக்டர் மீரா எங்கே?" என்றான்.
"அவள் கல்பியை பார்க்க போயிருக்கிறாள். அவளை அழைத்து வர ஜெமி சென்றிருக்கிறான். இப்போது வந்து விடுவார்கள்." என்று சொன்னார்.
"ம்… அவளை பார்க்க நான் கிளம்பறேன. என்னால் காத்திருக்க முடியாது" என்று எழுந்தான். அவனுடன் ரஞ்சனும் எழுந்து சென்றான்.
"என்.மருமகளுடன் சீக்கிரமாக வாப்பா"-என்று விஜயா அனுப்பி வைத்தார். இருவரும் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.
கல்பியை பார்த்து அவளுக்கு வேலை கிடைத்த விவரத்தை சொல்ல வேண்டும் என்று ஆர்வமாக ரேச்சல் சென்றாள். அவளுக்கு தேவைபட்டால் பண உதவிகூட செய்யலாம் என்று பர்ஸையும் எடுத்து சென்றிருந்தாள்.
தாய் பட்ட கடனை இல்லையென்று சொல்லாமல் தானே ஏற்றுக் கொண்டு அதை அடைக்க முயற்சிக்கும் கல்பியின் நேர்மை அவளுக்கு மிகவும் பிடித்து போனது. கார்மேகம் அவளுக்காக பணம் தர தயாராக இருந்தாலும் ஒழுக்கம் கருதி மறுத்து விட்டதும் பிடித்தது.. அவளுக்கு கண்டிப்பாக உதவியே ஆக வேண்டும் என்று நினைத்தாள். இதை அவளிடம் நேரிடையாக சொல்லி அவள் மகிழ்வதை பார்க்க ஆசைப்பட்டாள்.
மாலை நேரத்து சூரியனின் கிரணங்கள் பட்டு மஞ்சளும் சிவப்புமாக மாறிவிட்டது போல கல்பியின் வீடு அவளுக்கு தெரிந்தது. அதெப்படி சிவப்பாக தெரியும் என்ற யோசனையுடன் அருகில் சென்றபின்தான் தெரிந்தது. கல்பியின் வீடு தீப்பற்றி எரிகிறது…!
ஐயோ என்று கத்தியபடி அங்கு ஓடினாள். அங்கருந்தோர் அவளை தடுத்தனர்.