நம்பி நம்ம கம்பெனில பெரிய பதவியைகூட தரலாம். ஆனால் லைஃப்க்குள்ள விடக்கூடாது. வளைஞ்சு போக மாட்டாங்க. வாழ்க்கை டோட்டல் டாமேஜ்தான்"
"ரொம்ப வெறுப்பா பேசற…"
"நான் சொல்றதுதான் கரெக்ட். இதனாலதான் அவளை விட்டுட்டு ஒருத்தன் ஓடிப் போயிட்டான்."
அதற்கு மேல் சத்யன் பேசுவதை கேட்க ரேச்சலுக்கு பிடிக்கவில்லை. அவளை எவ்வளவு கேவலமாக பேசிட்டான்… அவள் அவனிடம் வாழ்க்கை பிச்சை கேட்டு நிற்பதுபோல அலட்டி கொள்கிறான்… ஸ்டுப்பிட்!
விருவிருவென நடந்து வீட்டிற்கு வந்த பின்னும் அவளுக்கு கோபம் தீரவில்லை… என்னவென்று அவளை நினைத்தான்… ஒரு பெண் நியாயத்திற்காக நாலு வார்த்தை கடுமையாக பேசக் கூடாதா…? உடனே அவள் வாயாடியாகி விடுவாளா?. மனதார அவனை திட்டி தீர்த்த பின்பும் மனதின் ஒரு மூலையில் ஏதோ ஒன்று குடைந்து கொண்டு இருந்தது.
நீண்ட நேரம் யோசித்த பின் பிடிபட்டது… அவனுக்கு அவளை பிடிக்கவில்லை என்பது முள் கொண்டு குடையும் வேதனையை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஏன்… எதையோ இழந்து விட்டதுபோல தோன்றியது… எதை இழந்தாள்… ம்… பாதுகாப்பு… நம்பிக்கை… பிரியம்…?.
யோசிக்குபோதே வேதனையோ… வலியோ எதுவோ இதயத்தில் இருந்து வந்து தொண்டையை அடைத்தது.
அவளை பற்றிய சத்யனின் அபிப்ராயம் இவ்வளவு வேதனை தருகிறதே… விலகி சென்றாலும் துன்பத்தை ஈட்டியாக எறிகிறான். காத தூரம் சென்றாலும் கண்ணில் படாமல் நின்றாலும்… கலங்கியே தீர வேண்டிய விதி அவளுடையதா…
அவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை… இந்த வேதனைக்கு காரணம் தோற்றுபோன பயம்தான்… குட்புக்கில் இருந்து விட்டு வெளித்தள்ளப்பட்ட அதிர்ச்சி… ஆமாம் அவளை அவன் எப்போது பாராட்டி இருக்கிறான்?. ஆனால் காலம்காலமாக அவனுடைய பாராட்டு மழையில் நனைந்த உணர்வு வருகிறதே… முன்ஜென்மம் என்ற ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா…?
என்னவொரு மடத்தனம்… தலையை உலுக்கியபடி சட்டென எழுந்து விட்டாள். இந்த அம்மா எங்கே?. இன்னும் வரவில்லை… முகாம் முடிந்திருக்குமே… ஜெமியையும் காணவில்லை…
ம்… கல்பிக்கு நாளை காலையாவது நல்ல பதில் சொல்ல வேண்டும்… அவள் வாசலுக்கு வந்தபோது ஷீலா காரிலிருந்து இறங்கியதை பார்த்தாள்..
"மா… " என்று அழைத்தபடி அவரை நெருங்கினாள்…
"உங்களுக்காகதான் காத்திருக்கிறேன். இன்னிக்கு லேட் ஆயிடுச்சா. ரொம்ப டயர்டா தெரியறீங்க… காபியும் பிஸ்கட்டும் கொண்டு வர்றேன். நீங்க ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க."