வெறுப்பில் வரும் கோபம்கூட தீர்ந்து விடும்… ஏமாற்றத்தில் வரும் கோபம் ஆழ்மனதை குடைந்து கொண்டு இருக்கும்… மனிதர்களால் நம்பிக்கை துரோகத்தை அதனால்தான் மன்னிக்க முடியாமல் போகிறது…
அதுசரி அவனும் அவளை தவிர்க்க எண்ணிதானே அப்படி பேசினான்… யோசிக்க யோசிக்க சிக்கல் பெரிதாகிக் கொண்டே போகிறது… அவன் ஒரு வழியையும் காணாமல்
எழுந்தான்
அவன் குளித்து முடித்து ஹாலிற்கு வரும்போது ரேச்சல் அங்கு இருப்பதை பார்த்தான்… எல்லோரும் அவங்கவங்க வழியில முயற்சிக்கறாங்க போலிருக்கு… அவர்களை பொறுத்தவரை அவள் ரேச்சல்தான்… புதுசா சேர்த்து வைக்க ரூட் போட பார்க்கறாங்க... ரேச்சலின் மனதில் சத்யனுக்கு இன்ட் மார்க்(X) விழுந்து விட்டது அவர்களுக்கு தெரியாதல்லவா…
"நந்து… உனக்கு இந்த டிசைன் பிடிச்சிருக்கா…" கையில் ஒரு கலம்காரி மெட்டீரியலை வைத்துக் கொண்டு ரேச்சல் கேட்டு கொண்டு இருந்தாள்.
அவளே ஒன்றும் நடக்காத மாதிரி இயல்பாக இருக்கும்போது அவனும் அப்படி செய்தால் என்ன?.
"வெரி ப்யூட்டிஃபுல்… நல்லாயிருக்குல்ல நந்து." என்றான்.
அவனுடைய பிரவேசத்தை எதிர்பார்க்காத ரேச்சல் முகம் மாறினாள்…
"நந்து நான் கிளம்பறேன்." என்று எழுந்தாள்.
"ஓ நோ… நீங்க இருங்க. நான் ஆஃபிஸிற்கு கிளம்பிட்டேன். " அவன் சொல்ல, ரேச்சல் முறைத்தாள்.
"ரேச்சல்ட்ட பேசிட்டு இருங்க அண்ணா. காபி எடுத்துட்டு வர்றேன்."
நந்தினி சந்தர்ப்பம் தெரியாமல் அவனை அம்போ என்று விட்டு விட்டு சென்றாள்.. உதடு கடித்து ஆழமான பார்வை வீசிய ரேச்சலைபார்க்கவும்...
'யம்மா … எங்கேம்மா என்னை தனியா விட்டுட்டு போறே.. இவள் என்னை சூப் வச்சிடுவாளே..' என்று மனதிற்குள் புலம்பினாலும்...
"கல்பியை காப்பாற்றிய உங்களுடைய துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும்." அன்றலர்ந்த தாமரைபோல முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.
"அப்படியே உங்க கம்பெனியில எனக்கு ஒரு பெரிய பதவி தந்திடுங்க" ரேச்சல் சிரித்தாளா சீறினாளா…?. ஆனால் அவை அவன் சொன்ன வார்த்தைகள்தான்.
'அவளை நம்பி நம்ம கம்பெனில பெரிய பதவியைகூட தரலாம்.' ரிப்பீட் அடிக்குதோ…'