என்று சொல்லி இருக்க வேண்டும். வாய் நிறைய பேச்ச பாரு" என்றான் மித்திரன்.
"ஆரம்பிச்சிட்டீங்களா?. ஹால்ல சண்டை போடுங்க ரூமுக்குள்ள போனா கட்டி புடிச்சுக்கோங்க" என்று ராம்குமார் சொல்ல,
" அப்பா ப்ளீஸ் நீங்க சொல்றதெல்லாம் தப்பு. சண்டையும் போடுவோம்.. சமாதானமும் ஆகிடுவோம். சரி இப்ப நான் நாளைக்கு உங்க கம்பெனிக்கு நான் வருகிறேன்" என்றான்.
" சரி வா நாம் காலையில் இருவரும் சேர்ந்தே செல்லலாம்" என்று ராம்குமார் சொல்லவும்…
"நானும் வரேன் " என்று சைத்ரன் சொன்னான்.
" ஏன் உனக்காக இந்த கொலை கொள்ளை எதுவும் நடக்கவில்லையா?. ஃப்ரியா இருக்க"
"கொலை கொள்ளை எது நடந்தாலும் முதல்ல ஆபிசருக்கு போயிட்டு அப்புறம் தான் எனக்கு வரும் அப்ப நான் பார்த்துகிறேன் அது வரைக்கும் நானும் ஃப்ரீதான்".
அன்று மாலை பூரணி வீட்டில் மித்ரனுக்காக ஒரு சிறப்பான பூஜையை செய்தார். அவன் நல்லபடியாக இந்த ஊரில் பேர் வாங்க வேண்டும் என்பதற்கான பூஜை. அந்த பூஜையை முடித்து மகிழ்ச்சியாக பழம் கதைகள் பேசி உறங்கி விட்டனர்.
நள்ளிரவு… அந்த பெண் இரவின் இருளில் வெளிச்சமாக தனியாக நடந்து வந்து கொண்டிருந்தாள். கையில் ஒரு மண்பானை சுமந்தபடி… தலை குனிந்து பாதையை நோக்காமல் நேர் பார்வை பார்த்தபடி சிங்கத்தின் கம்பீரத்துடன் அழுத்தமாக காலடி பதித்து நடந்து கொண்டிருந்தாள். அவளுடைய காற்சிலம்பு மணிகள் சீராக இசைத்தன.
அந்த பாதையில் இருந்த சிறு கோவில் ஒன்றிலிருந்து ஒரு உருவம் வந்தது. அந்த பெண் முன் நின்று கையை நீட்டியது.
கையிலிருந்த மண்பானையிலிருந்து ஒரு கவளம் சோற்றை எடுத்து நீட்டிய கைகளில் இட்டவள் நகர்ந்தாள். அவளுடைய சிந்தனை வயப்பட்ட தோற்றத்தை கண்டு
"தாயே காவல்காரி...இன்று கோபக்காரியாகி விட்டாயா?" என்று கேட்டபடி பதில் நாடி அந்த உருவம் அவளுடன் நடந்தது.