அடுத்து வந்த சிறு கோவிலிலும் இதுவே நடந்தது. கோவிலிலிருந்து வந்த உருவம் கையை நீட்டி சோற்று கவளத்தை வாங்கிபடி ஆச்சரியமாக பார்த்தது.
"தாயே… இன்று என்னிடம் ஊர் நியாயம் எதுவும் கேட்டகவில்லையே.. தங்களின் தயை மிகுந்த பார்வையும் எனக்கு கிட்டவில்லை. ஏன் தாயே?" அவ்விடம் மௌனம் நிலவ… மூவரும் நடந்தனர்.
அடுத்து வந்த சிறு கோவிலில் இருந்து வந்த உருவம் கை நீட்ட மறுத்தது.
"தாயே நீ அளப்பது அரிசி மட்டுமல்ல அன்பும்தான். அந்த கண்களின் பரிவு இல்லாமல் எங்கள் பசி தணியாது. தங்களின் கலக்கத்திற்கு காரணம் என்ன?" என்றது.
"ம்… என்னவென்று சொல்வது… ". அந்த காவல்காரி வாய் திறந்தாள்.
"துஷ்டன் கண்ணில் படாமல் தொலைதூரத்தில் இருந்த என் பிள்ளை இன்று எல்லைக்குள் வந்து விட்டான். அமைதியான நதியில் இனி கடும் வெள்ளம் பெருக்கெடுக்க போகிறது. கரையோரம் நின்ற படகு நடுநதிக்கு வந்து விட்டது. அது கவிழுமோ உடையுமோ என்ற கவலை வந்து விட்டது"
"நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் தாயே. துஷ்டனை துவம்சம் செய்து விடுகிறோம்"
"இறைவன் விதியில் நீயோ நானோ எதுவும் செய்ய முடியாது."
"பிறகு என் செய்ய?"
"அழிக்கும் சக்தியை தந்த என் இறைவன் அவனை காக்கும் சக்தியையும் படைத்திருக்கிறான்… ஆனால்…"
"ஆனால்…?"
"அதை அவன் புரிந்து கொள்ள வேண்டும்… விலக்கி வைத்தால் வினையாகி விடும்"
"தாங்கள் உண்மையை உரைக்கலாமே.."
"அவன் என் வீடு தேடி வரும்போதுதான் அதை செய்ய முடியும். அவனை என்னிடம் இழுத்து வரும் சக்தி அவளிடம்தான் உள்ளது. ஆனால் அவன் அவளை விட்டு விலகும்படிதான் விதி உள்ளது."