பல நூறு ஆண்டுகள் பிடிக்கும் போலிருக்கு!...அதனால நான் திரும்பி வர்றேன்”னு”
“சரிதானே?...ஷூ போடும் பழக்கமே இன்னும் வராத நாட்டுல எப்படிப் போய் வியாபாரம் பண்ண முடியும்?” என்றான் தனபால்.
“அதே அந்த சைனாக் கம்பெனியோட மேனேஜர் தன்னோட மேனேஜ்மெண்ட்டுக்கு என்ன மெயில் அனுப்பினாரு தெரியுமா?”
“என்ன அனுப்பினாரு?”
“இந்த நாட்டுல இன்னும் ஷூ அணியும் பழக்கம் வரலை!...ஸோ...இதுதான் நமக்கு நல்ல சமயம்...இப்ப நம்ம ஷூக்களைக் கொண்டு வந்து இறக்கி...அதை எப்படி அணியணும்?...அதை அணிவதனால் என்னென்ன பயன்?...எப்படியெல்லாம் காலுக்குப் பாதுகாப்பு?”ன்னு விவரிச்சா....எல்லோரும் ஷூவை வாங்குவாங்க!...மொத்தமும் ஸேல் ஆயிடும்!...அதனால....உடனே ஒரு முன்னூறு ஷூ அனுப்பி வைங்க”ன்னு மெயில் போட்டாரு!”
“அட...ஆமாம்...அதுவும் செரிதான்” என்றான் தனபால்.
“ஒரே விஷயம்...ஒருத்தர் எதிர்மறையாய்ப் பார்த்தார்...ஒருத்தர் நேர் மறையாய்ப் பார்த்தார்...திஸ் ஈஸ் மார்க்கெட்டிங்!” என்று சொல்லி விட்டு, “அந்தப் பொள்ளாச்சில என்ன பிராப்ளம்னு கண்டுபிடிச்சு அந்த பிராப்ளத்தையே நம்மோட ஃபார்முலாவா மாத்தினா அங்கேயும் ஜெயிக்கலாம்...நான் ஜெயிச்சுக் காட்டறேன்!...ஒருவரைச் சிகரத்திற்கு உயர்த்துவதும்....படு பாதாளத்திற்குத் தள்ளுவதும்...அவரது எண்ணம்தான்!..” நம்பிக்கையோடு சொன்னான் ரவீந்தர்.
சற்றுத் தள்ளி, தன் இருக்கையில் அமர்ந்து கம்ப்யூட்டர் மானிட்டரில் விழி பதித்திருந்த காவ்யாவின் காதுகள், ரவீந்தர் பேச்சைக் கூர்ந்து கவனித்து ரசித்துக் கொண்டிருந்தன.
“இந்தப் பயலுக்கு மார்க்கெட்டிங் அறிவு இருக்கற அளவுக்கு காதல் அறிவு இல்லை!...அதனாலதான் நான் குடுக்கற சிக்னல்களைப் புரிஞ்சுக்க மாட்டேங்கறான்” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.
காவ்யா, கருப்பு என்று சொல்ல முடியாது...அதே நேரம் சிகப்பு என்றும் சொல்ல முடியாத இடைப்பட்ட நிறத்திலிருக்கும் அழகி. இன்னும் திருமணமாகாத அவளுக்கு அந்த ஆபீஸிலிருக்கும் பேச்சிலர் பசங்கள் நிறைய பேர் காதல் விண்ணப்பம் போட்டு, அவளது நிராகரிப்பை பதிலாக வாங்கி வைத்திருக்கிறார்கள்.
அப்போது அவளருகில் வந்த ஆபீஸ் பாய் முருகன், “காவ்யா மேடம் உங்களுக்கு அழைப்பு” என்றான். சொல்லும் போது அவன் முகத்தில் லேசாய் நக்கல் தெரிந்தது. “போ...போ...போய் நல்லா திட்டு வாங்கு” என்று அவன் உள்ளூர நினைப்பான் என்பது காவ்யாவிற்கு நன்றாகவே தெரியும்.