" எனக்கு ஒண்ணு புரியுது, வாங்கித் தந்தது போதாமல், இன்னும் வேற ஏதோ வாங்கி தர சொல்லப் போறீங்கன்னு"
" தலைவான்னு அழைக்கிறது இதுக்குத்தான்! நாங்க வாய் திறந்து எதையும் கேட்கும் முன்பே, புரிஞ்சிக்கிட்டீங்க பாருங்க, அதனாலதான் நீங்க தலைவரு!"
" சரி, சொல்லுங்க! முடிந்தால் செய்கிறேன், இல்லைனா சொல்லிடறேன்"
"இப்ப எங்க எல்லாரிடமும் பிளாட் பத்திரம் இல்லை, ஏன்னு கேட்டால், அதை அடகு வச்சி கடன் வாங்கி யிருக்கிறோம். அடமானம் வச்சிருக்கிறதுக்கான ரசீது இருக்கு! தவிர, பத்திரத்தின் நகல் இருக்கு. கடனை அடைச்சால்தான் ஒரிஜினல் கைக்கு வரும், யாருமே பத்திரம் இல்லாம கடன் தரமாட்டேங்கறாங்க! அதனாலே, நீங்க சிபாரிசு பண்ணி, நாங்க அடமான ரசீதும் நகல் பத்திரமும் தந்தாலே, முன்பணம் தரச்சொல்லணும் முன்பணம் இருபது லட்சம் தந்தால் போதும். உடனே கடனை அடைத்து ஒரிஜினல் பத்திரத்தையும் வில்லங்க பத்திரத்தையும் வக்கீலிடம் ஒப்படைச்சிடறோம். அடமானமே வைக்காதவங்க இந்த சலுகை கேட்கலே, அவங்க உடனடியா ரெண்டு பத்திரங்களையும் தந்து அட்வான்ஸ் வாங்கிப்பாங்க. தலைவர்தான் வக்கீலிடம் பேசி இதற்கு சம்மதம் வாங்கி தரணும்.....ப்ளீஸ்!"
" ஒண்ணு செய்வோம்.எல்லா ஓனர்களும் அவங்களிடம் கைவசம் இருக்கிற பத்திரம் ரசீதை எடுத்துக்கொண்டு போய், வக்கீலிடம் தந்து நம்ம வேண்டுகோளைச் சொல்வோம். அவர் எல்லா பத்திரங்களையும் சரிபார்த்து விட்டு, முடிவு சொல்வார். அப்போது தகுந்தபடி பேசி அவரை சம்மதிக்கவைக்க முயற்சி செய்கிறேன்....."
'தலைவர் வாழ்க!' என ஏகோபித்து வாழ்த்தி மற்ற ஓனர்கள் கலைந்து சென்ற பிறகு நிரஞ்சன் வீடு திரும்பிய போது, அங்கே பத்துபேர் காத்திருந்தனர்.
அவர்கள், வாடகைக்கு குடியிருப்பவர்கள்!
" தலைவா வணக்கம்!" என்று கரங்கூப்பி நின்றனர்.
நிரஞ்சனுக்கு ஒன்றும் புரியவில்லை.
" வணக்கம். உங்களுக்கு நான் என்ன செய்யணும்னு புரியலியே?"
" அப்படி சொல்லிட்டா எப்படி? எங்களுக்கும் நீங்க தான் தலைவர்! வேற யாரு எங்களுக்கு உதவமுடியும்? எங்க ஓனர்கள் மாசம் பிறந்து வாடகை வாங்க இங்க வரது தவிர, மற்ற நாட்களிலே அவங்க இங்க வரமாட்டாங்க, நாங்கதான் உங்களை தினம் பார்க்கிறோம். நீங்க சொல்ற படி கேட்டு நடக்கிறோம். அதனாலே எங்களுக்கு இப்ப கஷ்டம் வந்திருக்கிறபோது நீங்கதான் எங்களுக்கு உதவ முன்வரணும்......"
" முடிந்தால் கட்டாயம் செய்கிறேன், சொல்லுங்க!"