தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 25 - ஜெய்
இன்றோடு மைத்திக்கு bye bye சொல்றோம்... என்னால் முடிந்தவரை கதையைத் இழுக்காமல், போர் அடிக்காமல் கொடுத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்... தவறுகள் இருந்தால் கண்டிப்பாக சுட்டிக்காட்டவும்... அடுத்த கதையில் திருத்திக் கொள்ள உதவும்... . கிரிக்கெட் வைத்து கதை எழுத வேண்டுமென்ற என் கனா இந்தக் கதையால் மெய்ப்பட்டுவிட்டது... மிக சந்தோஷமாக உணர்ந்தேன்.. அடுத்த கதை பற்றிய அறிவிப்புடன் விரைவில் வருகிறேன்.... ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கமெண்ட் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
நான்கு வருடங்களுக்கு பிறகு....
“மைத்திம்மா எல்லாம் எடுத்து வச்சுண்டயா... எதையும் விடலையே... “
“வச்சுண்டாச்சு பாட்டி.... எதையும் மறக்கலை...”
“சரி எத்தனை மணிக்கு கிளம்பணும்.... “
“ராத்திரி பத்து மணிக்கு கிளம்பினா போறும் பாட்டி... போன முறை மாதிரியேதான் டெல்லி போயிட்டு அங்கேருந்து ஆஸ்திரேலிய விமானம் ஏறணும்....”, மைத்தி சொல்ல காமாட்சி பாட்டி அவளிற்கு தலை பின்னிக் கொண்டிருந்தார்...
“சரி அப்போ சாயங்காலம் கபாலி கோவிலுக்கு போயிட்டு ஒரு அர்ச்சனை பண்ணிண்டு வந்துடு.... அப்படியே முண்டகக் கண்ணி அம்மன் கோவில்லையும்....”
“சரி பாட்டி...”, மைத்தி தலையாட்டிய படி மீதி இருக்கும் பாக்கிங் வேலைகளை கவனிக்க சென்றாள்... காமாட்சி பாட்டி தன் கடைக்கு சென்று, விட்ட தையல் வேலையைத் தொடர்ந்தார்....
இந்த நான்கு வருடத்தில் மைத்தி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் எவரும் தொட முடியாத உச்சத்தில் இருந்தாள்... மைத்தி பந்து வீச வருகிறாள் என்றாலே எதிரணியினர் தங்களுக்கு பாதகம் வராத சற்று பாதுகாப்பான தடுப்பு ஆட்டத்தையே ஆடுவர்... அதேபோல் பாட்டிங்கில் துளசி கலக்கினாள்.... இவர்கள் இருவரும் தேர்வாகாத எந்த வெளிநாட்டு போட்டியும் இருக்காது...
மைத்தியின் விளையாட்டை போலவே அவளின் குடும்பமும் சற்று முன்னேற்றத்திற்கு சென்றது....
அனந்துவிற்கு தொடர்ந்த இரண்டு வருட சிகிச்சையில் சற்றே முன்னேற்றம் இருந்தது.... ஓரளவு கம்பின் உதவியுடன் நடக்க ஆரம்பித்திருந்தார்... ஓடி ஆட முடியாவிட்டாலும் தன் காரியங்களை தானே பார்க்க ஆரம்பித்திருந்தார்.... தன் இரண்டாவது மச்சினர் கிருஷ்ணனுடன் சேர்ந்து கடந்த ஒரு வருடமாக வேலைக்கும் சென்று வருகிறார்....