“அவருக்கும் வீட்டுல இருந்துதாம்மா... எனக்கு மொத்தமா மூடிட்டாங்க... அவரை ஏதோ வீட்டுல இருந்தே வேலை பார்க்கலாம் அப்படின்னு சொல்லி இருக்காங்களாம்....”
“ஹ்ம்ம் உன் மாமியாரை நினைச்சாதான் எனக்கு இப்போவே கலங்குது... கடையெல்லாம் அடைச்சு வச்சிருக்காங்க.... எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி வாங்கலாம்ன்னு உங்கப்பா என்னை எந்த சாமானும் வாங்க விடலை... ஆண்டவன் புண்ணியத்துல இந்த மாசக் கடைசிக்குள்ளயானும் எல்லாம் திறக்கணும்... நிச்சயத்தும்போதே அந்தம்மா அந்த கெடுபிடி பண்ணிச்சு.. அவங்க சொன்ன சீர் வைக்காம கல்யாணம் பண்ணினோம் கல்யாணத்தையே நிறுத்தினாலும் நிறுத்திடும்...”
திவ்யாவிற்குமே அந்த பயம் இருந்தது... காதலிக்கும் வரை கண்ணே, மணியே என்று திவ்யாவின் பின்னால் சுற்றிய குமார் திருமண நிச்சயம் முடிந்தவுடன் அப்படியே அம்மா பிள்ளையாக மாறிவிட்டான்... அவன் அம்மா சொல்வதே வேதவாக்கு... திருமணத்திற்கு நகைகள் மட்டுமே வாங்கி இருந்தார்கள்... பாத்திரம், துணிமணி அனைத்தும் பாதிதான் வாங்கி இருக்கிறார்கள்...
“கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே....”
என்று சுப்ரபாதம் பாடியபடியே பூஜையறையை சுத்தம் செய்து விளக்கேற்றினாள் லக்ஷ்மி...
ஹாலில் பேப்பர் படித்தபடி இருந்த அவளின் அப்பா ரங்கன்,
“அம்மாடி லக்ஷ்மி அண்ணா பேசினானா... நேத்தைக்கு ரொம்ப க்ஷீணமா இருந்ததால சீக்கிரமே தூங்கிட்டேன்....”
“இன்னைக்கு காரியம் எல்லாம் முடிஞ்சப்பறம் மத்தியானமா பண்றேன்னு சொன்னான்ப்பா....”
“ஹ்ம்ம் பிள்ளையை கண்காணாத இடத்துக்கு அனுப்பிட்டு கவலைப்பட வேண்டியதா இருக்கு... அங்க நிலைமை எப்படி இருக்காம்... காரியமெல்லாம் பண்ணறாளாமா...”
“வெளிலேர்ந்து யாரும் வர முடியாது போல இருக்கு... சுத்து வட்டாரத்துல இருக்கறவா மட்டும் வராளாம்....”
ரங்கனின் குடும்பம் கீழ் நடுத்தர வர்க்கம்... அவர்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோவிலில் ரங்கன் அர்ச்சகராக உள்ளார்.... ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் ரங்கனின் மனைவி உயிரிழந்துவிட்டார்.... ஒரு பெண், ஒரு ஆண் என்று இரண்டு குழந்தைகள்... லக்ஷ்மி இவர்களுக்கு தெரிந்த ஒரு வீட்டில் சமையல் வேலை செய்ய செல்கிறாள்... ரங்கனின் மகன் வைதீக காரியங்களுக்கு செல்கிறான்... காசியில் தெரிந்த வாத்தியாரிடம் வேலையில் இருக்கிறான்...
“இன்னைக்கு நீ மாமியாத்துக்கு சமைக்க போறியா....”