(Reading time: 9 - 18 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 12 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

மா தேவி! நான்  அவனைத் தான் கல்யாணம் பண்ணப்போறேன். அவன் ரொம்ப நாளா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு என்கிட்டே கேட்டுட்டு இருந்தானா,சரிப் போனாப் போகுது.நல்ல பையன் தானேன்னு யோசிச்சு நேத்துதான் நானே சம்மதம் சொன்னேன்.

அடிப்பாவி. நீ உருப்படமாட்ட! என்கூட பேசவே பேசாதடி நீ! என்று தேவி சொல்லிவிட்டு ரம்யாவின் பதிலால் ஏற்பட்ட  கோபத்தில் அவள் கிளம்பினாள்.

அடுத்த இரண்டு வாரங்கள்  தேவி ரம்யாவிடம்  பேசவில்லை. ரம்யா அவளுடன் பேசும்படி தேவியைக் கூப்பிட்டுக் கேட்டுக்கொண்டே இருந்தாள்.

கண்மணி தான், “ என்னடி கவிழ்ந்துட்ட போல, மதில் மேல பூனையா நடந்துட்டு இருந்த, உன் அம்மா அப்பா பக்கம் தான் மேக்சிமம் நீ சாய்வன்னு நினைச்சேன். தினேஷ் பக்கம் சாஞ்சுட்ட! பரவாயில்ல! உன் வாழ்க்கை உன் முடிவு!” என்று சொல்லிவிட்டாள்.

நான் தினமும் உனக்குப் போன் பண்ணால், வீட்ல பிரச்சினை ஆகிடும்ல, இரண்டு நாளைக்கு ஒரு தடவை கால் பண்றேன். மாத்தி மாத்தி யாராச்சும் உன் பிரெண்ட் பேரை சொல்லிக்கோ என்று தினேஷ்  சொல்லவும்,  அம்மா அப்பாவிடம் ஏமாற்றும் பொய்யும் பேசியே காதல்  வளர்க்க முடியும் எனப் புரிந்தது

முதலில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று போன் செய்தவன், தினமும் இருமுறை பேசும் அளவுக்கு வந்துவிட்டான். வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் நீண்ட உரையாடலும் அருகில் யாரேனும் இருந்தால் சில வார்த்தைகளோடும் அவர்களின் பேச்சு நிறைவுறும்.கல்லூரியில் கேண்டீன், லேப், ஒர்க்ஷாப் என அங்கிங்கு செல்லும் போதோ, அவர்களின் வகுப்புகள் இருந்த ஐந்தாம் ப்ளாக் கட்டிடத்தின் நீண்ட தாழ்வாரங்களில் நடக்கையிலோ ஒருவருக்கொருவர் ஒரு நொடி மின்னல் வேகப்பார்வை வீசிச் செல்வதே அவர்களுக்கு சந்திக்கும் வாய்ப்பாகக் கிடைத்தது.   அவளின் காதுக்கெட்டிய ஒரு அறிவிப்பு ரம்யாவிற்கு மிகவும் உற்சாகமாகவிருந்தது. அந்த கட்டிடத்தின் ஐந்தாம் தளத்தில் நடக்க இருக்கும் சில கட்டுமானப் பணிகள் காரணமாக, தினேஷின் வகுப்பறை மூன்றாம் தளத்தில் ரம்யாவின் வகுப்பறைக்கு அடுத்ததாக மாற்றப்பட்டது. ரம்யா தன் வகுப்பைக் கடக்கும் போதெல்லாம், தினேஷ் அதை உணர்ந்து ஜன்னலைப் பார்ப்பான். அவளும் அவனைப்  பார்ப்பாள். அவர்களையும் அறியாமல் சில நேரம் ஒரே நிறத்தில் உடைகள்  அணிந்து வருவார்கள், அதிலொரு மகிழ்ச்சி கிடைக்கும் ரம்யாவுக்கு.  ஒரு நாள் இன்ஜினியரிங் டிராயிங் வகுப்புக்குக் கிளம்பியவள், தினேஷின் வகுப்பைக் கடக்கையில் அவனைப் பார்க்கும் மும்முரத்தில் கையில் இருந்த ஜாமெட்ரி பாக்சைத் தவற விட்டுவிட்டாள். சிலீர் என்ற சத்தத்துடன் விழுந்ததும், அவனின் மொத்த வகுப்பும் வெளியில் திரும்பிப் பார்த்தது.

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.