அப்பா...அம்மா...மற்றும் இரு சகோதரிகளும் இறங்க,
எல்லோரும் பரபரப்பாயினர்.
அந்தக் காரைத் தொடர்ந்து வந்து நின்ற மினி வேனிலிருந்து அவர்களது உறவுக்காரர்கள் வரிசையாக இறங்கினர்.
வழக்கமாய் இது போல் பெண் பார்க்க வரும் போது அதிகபட்சமாய் ஒரு ஏழெட்டு பேர் வருவார்கள். ஆனால், இன்று கிட்டத்தட்ட பதினைந்து பேர்கள் வந்திருக்க, தேவநாதனுக்கு பகீரென்றானது. “ஆஹா...இன்னிக்குன்னு பார்த்து ஆளுக வேற ரொம்ப பேர் வந்திருக்காங்களே!...இத்தனை பேர் முன்னிலையில் அந்தப் பொம்பளை ஆட்டம் போடாம இருக்கணுமே!”
கூடத்தைப் பார்க்கும் வண்ணம் அமைந்திருந்த அந்தச் சிறிய ஜன்னல் அருகே நின்று கொண்டு, நடப்பவைகளையெல்லாம் தன் அக்காவிற்கு ரன்னிங கமெண்ட்ரி கொடுக்க ஆரம்பித்தாள் அர்ச்சனா.
“ம்ம்ம்...இப்போது மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ஹாலுக்குள் வந்து விட்டார்கள்!!...இப்போது அவர்கள் எல்லோரும் கீழே விரிக்கப்பட்டிருக்கும் ஜமுக்காளத்தில் உட்கார்ந்து விட்டார்கள்!...வந்திருப்பவர்களில் ஐந்து ஆண்கள் மட்டும் நாற்காலியில் அமர, அவர்களோடு பெண்ணின் தந்தையான தேவநாதனும் சேரில் அமர்ந்தார்!...நாற்காலியில் அமர்ந்துள்ள ஐந்து பேரில் ஒருவர் மட்டுமே வயதில் சற்று இளையவரா இருப்பதால்...அவர்தான் மாப்பிள்ளை..என்று யூகிக்கலாம்!...அவர் அருகில் அதே முக ஜாடையில் இன்னொருவர் வயதான தோற்றத்தில் உள்ளார்!...அநேகமா அவர்தான் மாப்பிள்ளையின் தந்தையாக இருக்கக் கூடும்!...ம்ம்ம்..மற்ற ஆண்களைப் பற்றிய விபரங்கள் இப்போது தெரியவில்லை!...இன்னும் சிறிது நேரத்தில் தெரிய வரலாம்!”
“ஏய்...அர்ச்சனா...போதும்டி உன் கிண்டல் பேச்சு!.....நீ பேசறது அங்க ஹால் வரைக்குமே கேட்கும் போலிருக்கே!” சுலோச்சனா தங்கையை அதட்டினாள்.
“சரி...சரி” என்ற அர்ச்சனா தன் நேர் முக வர்ணனையை கீழ் குரலில் தொடர்ந்தாள். “கீழே ஜமுக்காளத்தில் ஏழெட்டுப் பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள்!...அதில் மூன்று பேர் பட்டுப் புடவை கட்டியிருக்கிறார்கள்...எங்கள் கணிப்புபடி அதில் வயதானவராகத் தெரியும் பெண்மணிதான் மாப்பிள்ளையின் தாயார் என நம்புவோம்!..மற்ற இருவரும் முக ஜாடையை வைத்துப் பார்க்கும் போது மாப்பிள்ளையின் சகோதரிகளாக இருக்கக்கூடும்!”
“அர்ச்சனா..நீ சொல்ற கணக்கைப் பார்த்தா..அவங்க பக்கத்திலிருந்து கிட்டத்தட்ட பத்துப் பதினஞ்சு பேருக்கும் மேலே வந்திருப்பாங்க போலிருக்கே?” சுலோச்சனா கவலையுடன் சொல்ல,