ஆடிட்டோரியம் தான் தேர்வு மையம். முதல் ட்ரிப்பில் சீக்கிரமே கல்லூரிக்கு வந்தவள் அவன் கையில் ஸ்கேல், பென்சில், செல்லோ பால் பாயின்ட் பென் கருப்பு நிறத்தில் ஒன்று , நீல நிறத்தில் ஒன்று, எரேசர் என அவளுக்கு வைத்திருந்த ஸ்டேசனரி செட் போல அப்படியே ஒன்றை அவனிடம் ரம்யா கொடுத்தாள். பரீட்சை எழுதி முடித்ததும், தினேஷ் அவற்றை அவளிடம் திருப்பித் தந்து விட்டு, இன்னிக்கு எக்ஸாம் சூப்பரா எழுதியிருக்கேன். எல்லாம் நீ கொடுத்த பேனா ராசி தான்! இதே மாதிரி அடுத்த எக்சாமுக்கும் நீயே கொண்டு வந்து உன் கையால் என்கிட்டே தா! என்று சொன்னான் தினேஷ். நீ எக்ஸாம் எப்படி எழுதின என்று தினேஷ் அவளைக் கேட்கவில்லை. அப்படியே கேட்டிருந்தாலும் அவனிடம் பொய் சொல்ல அவளுக்கு மனமிருந்திருக்காது. அவள் டிஸ்க்ரீட் மேத்ஸ் என்னும் அந்த கடினமான பேப்பரை நன்கு எழுதவில்லை. பெயில் ஆகிவிடுவோமோ என்று கூட லேசான ஒரு பயம் இருந்தது. அதைச் சொல்லி அவனைக் கவலைப் பட வைப்பதை விட அவன் கேட்காமல் விட்டதே நல்லதெனப் பட்டது ரம்யாவுக்கு. வீடு வந்து சேர்ந்தவளிடம், அம்மா வழக்கம் போலவே பரீட்சை குறித்து கேள்விகள் கேட்க ஆரம்பிக்க, “கொஸ்டின் பேப்பர் கஷ்டமா தான் இருந்தது. நல்ல மார்க் வர்றது கஷ்டம் தான்!” என்று சொல்லிவைத்தாள். “நீ பேசாமல் சத்யா படிக்கிற ஆர்ட்ஸ் காலேஜ்ல பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்திருந்தால் கூட நல்லாப் படிச்சிருப்ப போல! இங்க பீஸ் கட்டுறதுல பாதி தான் கட்டனும்! ரம்யா இன்னும் அதிகப் பொறுப்பாகப் படிக்கணும் என்பதை அம்மா மறைமுகமாகச் சொல்லவும், அமைதி காத்தாள்.
செமஸ்டர் தேர்வுகள் மே மாதத்தில் நடந்து கொண்டிருந்தன. அவளின் கல்லூரியில் பரீட்சைகள் முடிவதற்குள் குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்குப் பள்ளி துவங்கிவிடும் என்பதால் அவளைத் தவிர்த்து மொத்தக் குடும்பமும் ஒரு விடுமுறைப் பயணத்திற்கு புறப்பட்டது. தேர்வு காரணமாக அவள் மட்டும் செல்லவில்லை. துணைக்குப் பாட்டியை வரவழைத்து அவளுடன் இருக்கச் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பிவிட்டனர். அம்மா, அப்பா, ரகு, சித்தி, சித்தப்பா அவர்களின் பிள்ளைகள் என நான்கு குடும்பங்கள் செல்லும் பயணம் கண்டிப்பாக மிகுந்த மகிழ்ச்சிகரமானது. ஆனால் அதை இழக்கிறோம் என்ற உணர்வு ரம்யாவுக்குத் துளியும் இல்லை. யாரைப் பற்றிய பயமுமின்றி தினேஷுடன் பேச நிறைய நேரம் கிடைத்ததில் ரம்யா மகிழ்ச்சியடைந்தாள். தினேஷின் அம்மாவும் ஹாஸ்பிட்டலில் இரவு ஷிப்டுக்கு வேலைக்குச் செல்வதால் இருவருக்கும் மிகவும் வசதியாகப் போய்விட்டது. இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தனர். ரம்யாவின் அப்பா, பி.எஸ்.என்.எல். 250 ப்ரீ போன்கால்கள் உள்ள பேக்கேஜ் எடுத்திருப்பார். எப்படியும் பேசினாலும் பேசாவிட்டாலும் ஒரே கட்டணம் தான். அதை மீறிப் பேசிவிடக் கூடாது என்ற பயமும் ரம்யாவுக்கு உண்டு. பாட்டி தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு தூங்குபவர். ரம்யாவும் தினேஷும் தத்தம் சிறு வயது சம்பவங்கள், நண்பர்கள், பிடித்த பாடல்கள்,