சில நிமிடங்கள் புருவத்தை நெரித்துக் கொண்டு யோசித்த ஏ.சி.தீனதயாள்
“ஓ.கே!...நீ சொன்ன விஷயங்களெல்லாம் நிஜம்தானா?ன்னு உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் நானே நேர்ல வந்தேன்!...சரி...கிளம்பறேன்!...நாளைக்கு பகல்ல வர்றேன்!”
“சார்...நான் சொன்னதெல்லாம் நெஜம்னு புரிஞ்சிட்டீங்களா சார்?”
“ம்ம்...நீ சொன்னதும் நெஜம்!...இங்க நான் பார்த்ததும் நெஜம்!..ஆனா...இந்த நெஜங்களுக்குப் பின்னால் இருக்கற நிழல் யாரு?...அல்லது என்ன?...அதைத்தான் கண்டுபிடிக்கணும்!”
ஏ.சி.சென்றதும தனது பில்டிங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான் செக்யூரிட்டி சுந்தரம்.
பாதி தூரம் சென்றவன் திடீரென்று மழைத் தூறல் தன் மீது விழ “என்னது...திடீர்ன்னு மழை பெய்யுது?” தனக்குத்தானே கேட்டபடி நடையைத் துரிதப்படுத்தினான்.
அப்போது தன் கை பிசுபிசுப்பதை உணர்ந்து உள்ளங்கையை உற்றுப் பார்த்தான்.
ரத்தம்.
“அய்யய்யா...இதென்ன ரத்தம்?...இது எங்கிருந்து வந்தது?”
குனிந்து தன் சட்டையைப் பார்த்த்தும் அதிர்ந்து போனான். ரத்தத் தூறல்கள் புள்ளிக் கோலமிட்டிருந்தன.
கீழே தரையைப் பார்த்தான் ரத்தச் சேறு. “அப்படின்னா...பெய்தது ரத்த மழையா?
தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்தான். அது ரத்தச் சிவப்பில் மின்னியது.
“அய்யய்யோ...மழை...ரத்த மழை...ரத்த மழை!” என்று கத்திக் கொண்டே ஓடியவன் தன் வாட்ச்மேன் கூண்டை அடைந்ததும் தலை மற்றும் முகத்தில் வடிந்து கொண்டிருந்த ரத்தத்தை அங்கிருந்த துண்டை எடுத்துத் துடைத்தான்.
யாரோ பிடுங்கியெறிந்தது போல் அந்தத் துண்டு அவன் கையிலிருந்து தெறித்துப் போய் விழ
அலறினான்.
அவன் அலறலைக் கேட்க அங்கு யாருமே இல்லாததால் அது வெறுமனே காற்றில் கரைந்து போய் விட
அவன் உயிரும் அந்த அலறலோடு சேர்ந்து காற்றில் கரைய அரம்பித்தது.
அடுத்த சில விநாடிகளில் “தொப்”பென்று தரையில் கட்டையாய் விழுந்தது செக்யூரிட்டி சுந்தரத்தின் உயிரற்ற உடல்.
தொடரும்...
Next episode will be published on 16th Feb. This series is updated weekly on Tuesdays.