பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த வாடை சட்டென்று மாறி விட யாரோ “திமு..திமு”வென்று மாடிப்படிகளில் ஓடும் ஓசை எல்லா ஃப்ளோர்களிலும் கேட்டது.
சிலிர்த்துப் போனார் ஏ.சி.
சர்வீஸில் எத்தனையோ பயங்கரங்களை...எத்தனையோ கோரங்களை...எத்தனையோ குரூரங்களைப் பார்த்திருக்கின்றார்!...அப்போதெல்லாம் சிலிர்க்காத அவரது இரும்பு மேனி இப்போது சிலிர்த்தது.
திடீரென்று அவரருகே வந்து அவரது கையைச் சுரண்டினான் செக்யூரிட்டி சுந்தரம். “சா...ர்!”
“என்னப்பா?”
“அப்படியே மெல்லத் தலையைத் தூக்கி மொட்டை மாடியில் பாருங்க!” என்றான் அவன் மெல்லிய குரலில்.
ஏ.சி.யும் நிதானமாகத் தலையைத் தூக்கிப் பார்த்தார். மொட்டை மாடியின் கைப்பிடிச்சுவற்றின் மீது நான்கைந்து பேர் உட்கார்ந்திருப்பது போன்று நிழலுருவங்கள் தெரிய
“யோவ்...யாருய்யா அவங்கெல்லாம்?”
“அவங்க” அல்ல சார்... “அதுக”....பேய்க” சுந்தரத்தின் குரலில் நடுக்கம் வந்திருந்தது.
“கைல டார்ச் லைட் வெச்சிருக்கியா சுந்தரம்?”
“இல்லையே சார்!”
“போ...போய் எடுத்திட்டு வா!” பரபரத்தார்.
ஓடினான்.
அவன் கொண்டு வந்து கொடுத்த டார்ச் லைட்டின் ஒளியை மொட்டை மாடிக்கு பீச்சியடித்தார் ஏ.சி.
ஒளி பட்ட அடுத்த விநாடி “சர...சர”வென்று அந்த உருவங்கள் காற்றில் கரைந்து போயின.
“பார்த்தீங்களா சார்?...தெனமும் இதே கூத்துதான் சார்!...
“என்னதான்னு பார்த்துடுவோம்”ன்னு யாராவது துணிஞ்சு மேலே போனாங்கன்னா....ஒண்ணு தண்ணித் தொட்டில மொணமா மொதப்பாங்க!...இல்லே...மேலேயிருந்து தலைக் குப்புற கீழே விழுந்து...நேத்திக்கு செக்யூரிட்டி ஒருத்தன் செத்துக் கெடந்தான் பாருங்க?..அப்படிக் கிடப்பாங்க!” சொல்லும் போதே குரல் நடுங்கியது அவனுக்கு.