தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 12 - முகில் தினகரன்
அன்று ஞாயிற்றுக் கிழமை. தூக்கத்திலிருந்து கண் விழித்தும் எழாமல் படுக்கையிலேயே படுத்துக் கிடந்தான் ரவீந்தர்.
“சலங்கையிட்டாள் ஒரு மாது...சங்கீதம் நீ பாடு” பாடலை இசைத்தது ரவீந்தரின் மொபைல்.
படுத்தவாறே மொபைலை எடுத்துப் பார்த்தான். சுதாகர்ஜி.
“அய்யய்யோ....ஸ்வாமிஜி கூப்பிடறாரே?” என்று வாய் விட்டுச் சொல்லியவாறே எழுந்து படுக்கையில் அமர்ந்தவாறே பேசினான். “சொல்லுங்க ஜீ”
“என்ன ரவீந்தர்?...இன்னும் திருப்பள்ளி எழுச்சி ஆகலையா?”
“இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை...அதான்...சாவகாசமாய்ப் படுத்திட்டேன்”
“சரி...அன்னிக்கு ஒரு விஷயம் சொன்னேனே?...அதைப் பத்தி யோசிச்சியா?...உன் கிட்டேயிருந்து போன் வரும்!னு எதிர்பார்த்திட்டேயிருந்தேன்..வரவேயில்லை!...என்னப்பா...ரொம்பக் கஷ்ட்த்துல இருக்கேன்...ஏதாச்சும் உதவி பண்ணுப்பா!”
“அது..வந்து...இந்த ஆபீஸுக்கு புதுசா வந்திருக்கேன் அல்லவா?...அதான் கொஞ்சம் வேலை ஜாஸ்தியாய் இருந்திச்சு” சமாளித்தான் ரவீந்தர்.
“இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமைதானே?...லீவுதானே?” சுதாகர்ஜி வகையாய்க் கேட்டார்.
“ம்,...லீவுதான்!”
“நீ கோயிலுக்கு வர்றியா?..இல்லை நான் உன் ரூமுக்கு வரவா?” என்று கேட்டு விட்டு, பிறகு அவரே, “இல்லை...நானே உன் ரூமுக்கு வர்றேன்!...கஸ்தூரி அய்யாவையும்...வத்சலா அம்மாவையும் பார்த்து ரொம்ப நாளாச்சு” என்று முடித்தார்.
“தாராளமா வாங்க ஜி”
“ஆமாம்...டிபன் சாப்பிட்டிய?” சுதாகர்ஜி கேட்க,
“இல்லை இனிமேல்தான்!...பக்கத்து மெஸ்ல இன்னிக்கு லேட்டாய்த்தான் டிபன் தயார் பண்ணுவாங்க!...அதனால...கொஞ்சம் லேட்டாகவே போய் சாப்பிட்டுக்கலாம்...னு” இழுத்தான் ரவீந்தர்.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்...இன்னிக்கு நம்ம வீட்டுல...சூப்பரா பூரி கிழங்கு பண்ணியிருக்கா...உனக்கு நான் எடுத்திட்டு வர்றேன்” என்றார் சுதாகர்ஜி.
“எதுக்கு ஜி உங்களுக்கு சிரமம்?”
“இதிலென்ன சிரமம்?...நான் வர்றதுக்குள்ளாரா நீ ஏதாச்சும் யோசனை பண்ணி வை”
இணைப்பைத் துண்டித்த ரவீந்தர், “இதென்னடா வம்பாயிருக்கு?...ஒரு பொருளை விற்பதற்குன்னா...ஈஸியா மார்க்கெட்டிங் வழிமுறைகளைச் சொல்லலாம்!...இந்த சுதாகர்ஜி கோயிலுக்கல்ல மார்க்கெட்டிங் பண்ணச் சொல்றார்?...எப்படி முடியும்?”