தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்
சம்பூர்ணத்தின் வீட்டு வாசற்கதவு திறந்திருக்க, உள்ளேயிருந்து அவளுடைய ஹீனக் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.
பார்வதி சடாரென்று திறந்திருந்த கதவிற்குள் நுழைந்தாள்.
அங்கே!
சம்பூர்ணத்தின் கணவர் கஸ்தூரிசாமி படுக்கையில் வாயைத் திறந்தபடி கிடக்க, அவரது விழிகளிரண்டும் மேல் நோக்கிச் செருகியிருந்தன. மார்புக்கூடு சலனமற்று நின்றிருந்தது.
அவரது தலை மாட்டில் உட்கார்ந்து கதறிக் கொண்டிருந்தாள் சம்பூர்ணம்.
“சம்பூர்ணம்மா....என்னம்மா?...என்னாச்சு?...அய்யாவுக்கு உடம்புக்கு என்ன?” பதறியபடி கேட்டாள் பார்வதி.
“பார்வதீ...என் ராசா என்னைத் தனியா தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரும்மா!...போயிட்டாரு!...அய்யோ...இனி நான் என்ன செய்வேன்?...எனக்கு யார் இருக்கா?...நேத்திக்கு வரையும் கல்லுக் குண்டாட்டம் இருந்த மனுஷன் இன்னிக்கு சவமாயிட்டாரே?”
அதற்குள் தேவநாதனும், பக்கத்துப் போர்ஷன் நரசிம்மனும் வந்து விட, பார்வதி அவர்களிடம் விஷயத்தைக் கூறினாள்.
அந்த நரசிம்மன் கஸ்தூரிசாமியின் உடலைத் தொட்டுப் பார்த்து ஆராய்ந்து விட்டு, உதட்டைப் பிதுக்கினார். “ப்ச்!...ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே போயிட்டாரு போலிருக்கே?” என்று சொல்ல,
சம்பூர்ணம் அழுதவாறே அந்த உண்மையைச் சொன்னாள், “ஆமாம் பார்வதி!...விடியற்காலைல நாலு மணிக்கு நெஞ்சு வலியால துடிச்சாரு...எனக்கு கையும் ஓடலை...காலும் ஓடலை!...யாரை உதவிக்குக் கூப்பிடறதுன்னே தெரியலை!...உங்களைக் கூப்பிடலாம்ன்னா உங்க வீட்டுல இன்னுக்கு ஒரு நல்ல காரியம் வெச்சிருக்கீங்க!...அந்தச் சூழ்நிலைல உங்களைக் கூப்பிட்டு தொந்தரவு பண்ண என் மனசு இடம் கொடுக்கலை!...ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவரோட ஆவி அடங்கிடுச்சு பார்வதி! தலையிலடித்துக் கொண்டாள் சம்பூர்ணம்.
“அப்படின்னா...நீங்க அங்க வந்து கூட்டத்தோட உட்கார்ந்திட்டு இருந்தீங்களே?...அப்பவே உங்களுக்கு விஷயம் தெரியுமா?” பார்வதி நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டாள்.
“நல்லாவே தெரியும்!...மாப்பிள்ளை வீட்டுக்காரங்க போற வரைக்கும் இந்த விஷயத்தை வெளியே சொல்லக் கூடாது!ன்னு என்னை நானே கட்டுப்படுத்திக்கிட்டு...மனசைக் கல்லாக்கிட்டுத்தான் அங்க வந்து உட்கார்ந்திருந்தேன்!...சத்தியமாச் சொல்றேன் பார்வதி...என் உடம்பு மட்டும்தான் அப்ப அங்க உட்கார்ந்திட்டிருந்தது..என் மனசு...என் மனசு...இங்கியேதான் இருந்தது!”