“எங்களுக்கெல்லாம் இந்த விஷயம் சுத்தமாத் தெரியவே தெரியாதுப்பா!...இன்னிக்கு உன்னைய நேர்ல பார்த்தப்ப எங்களால நம்பவே முடியலை!”
வரிசையாக எல்லோரும் வந்து சுரேஷிடம் அது குறித்து விசாரித்து விட்டு, வருத்தம் தெரிவித்தபடி செல்ல, அவனுக்கு அப்போதுதான் தெரிய வந்தது, தன் தாயார் தனக்கு விபத்து ஏற்பட்ட விஷயத்தையும், அதனால் தான் ஒற்றைக்காலை இழந்து விட்ட விஷயத்தையும், சுத்தமாகவே மறைத்து வைத்திருக்கிறாள் என்று.
“ஏம்மா...உங்க மகனுக்கு இப்படியொரு துயரம் ஏற்பட்டிருக்கற விஷயத்தை எங்களுக்கெல்லாம் தெரியாமலேயே வெச்சுட்டீங்களேம்மா!” பார்வதி அதை நேரடியாகவே சம்பூர்ணத்திடம் கேட்டு விட்டாள்.
“ஆமாம் பார்வதி...அது நடந்து ரெண்டு வருஷமாச்சு!...நாந்தான் யார்கிட்டேயும் சொல்லாம மறைச்சிட்டேன்!...அவன் தாய் நாட்டுக்கு வர்றேன்னு சொல்லும் போதெல்லாம் வர வேண்டாம்னு நானே தடுத்திடுவேன்!...ஏன்னா...அவன் வந்தான்னா அந்த செயற்கைகால் விஷயம் எல்லோருக்கும் தெரிஞ்சிடுமே!ங்கற பயம்!...ஹூம்...இப்ப அவன் அப்பா சாவுக்கு வர வேண்டியதாப் போச்சு!” கண் கலங்கிச் சொன்னாள் சம்பூர்ணம்.
மெல்லத் தன் முகத்தை சம்பூர்ணத்தின் அருகில் கொண்டு போய், “மகன் ஒற்றைக்காலை இழந்த விஷயம்...அவனுடைய அப்பாவுக்காவது தெரியுமா?” என்று சன்னக் குரலில் கேட்டாள் பார்வதி.
இட, வலமாய்த் தலையாட்டிய சம்பூர்ணம், “ம்ஹூம்!...அவருக்கும் தெரியாது!...என் ஒருத்தியைத் தவிர வேற யாருக்குமே தெரியாது!” என்றாள்.
அதுவரையில் அமைதியாய் அவர்களது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அர்ச்சனா, திடீரென்று கேட்டாள், “எதுக்காக...எதுக்காக நீங்க அதை மறைக்கணும்?”
“எப்பவும் மத்தவங்களையெல்லாம் அதிகாரம் பண்ணியே பழகிய நான்...ஒருவேளை இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிய வந்தால், எல்லோரும் நேர்ல வருத்தப்படற மாதிரி பட்டுட்டு...அப்புறம் தங்களோட மனசுக்குள்ளாரவோ...அல்லது வெளிப்படையாகவோ... “இவளுக்கு இதுவும் வேணும்!...இன்னமும் வேணும்!”னு சொல்லிச் சந்தோஷப்படுவாங்களோ?ன்னு பயந்துதான் மறைச்சு வெச்சேன்!”
அவளை நெகிழ்வுடன் பார்த்தாள் அர்ச்சனா. “ஹூம்!...இந்த மனுஷி உண்மையிலேயே நல்ல பெண்மணிதான் போலிருக்கு!...உள் மனசுக்குள்ளார பெரிய வேதனையை அமுக்கி வெச்சிருந்ததால்தானோ என்னமோ...அதன் வெளிப்பாடாய் இத்தனை நாள் மத்தவங்களைத் திட்டிக்கிட்டும்...சத்தம் போட்டுக்கிட்டும் இருந்திருக்கு!..உள் ரணத்தின் வலிதான் அவளை உருமாற்றி இருந்திருக்கின்றது!”
உளவியல் ரீதியில் சிந்தித்தது அவள் மனம்.
தொடரும்...
Next episode will be published on 6th Mar. This series is updated weekly on Saturdays.