பார்வதி தன் நெஞ்சைத் தொட்டுப் பிரமித்தாள். அவளையேயறியாமல் அவள் விழிகள் ஈரமாயின.
அப்போது அவசர, அவசரமாய் உள்ளே நுழைந்த அர்ச்சனா நிலைமையை யூகித்து விட்டு, உறைந்து நின்றாள்.
தலையைத் தூக்கி அர்ச்சனாவைப் பார்த்து விட்டு, பார்வதியிடம் திரும்பிய சம்பூர்ணம், “பார்வதி...உன் மூத்த பொண்ணுக்கு ஒரு வரன் அமையாததினால நீங்கெல்லாம் எவ்வளவு வேதனைல இருக்கீங்க!ன்னு எனக்கு நல்லாவே தெரியும் பார்வதி!...ஒருவேளை நான் என் கணவர் இறந்துட்ட விஷயத்தை வெளிய சொல்லப் போக, வர்ற மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அதை ஒரு அபசகுனமா நெனச்சிட்டு திரும்பிப் போயிடக் கூடாது!ன்னுதான் நானே விஷயத்தை மறைச்சேன்!” சொல்லி விட்டு குனிந்து சத்தமில்லாமல் குலுங்கியவள், பிறகு அவளே தொடர்ந்தாள்,
“அதே மாதிரி...நான் இங்க...இந்த வீட்டுக்குள்ளார...இவரோட சவத்துக்குக் பக்கத்திலேயே உட்கார்ந்திட்டிருந்தேன்னா...எங்கே என்னையும் மீறி கத்திக் களேபரம் பண்ணிடுவேனோ?ன்னு பயந்துதான்...நீங்க என்னை அழையாத போதும் கூட...அதைப் பற்றி நினைக்காம நான் அங்க உங்க வீட்டுக்கு வந்து கூட்டத்தோட கூட்டமா உட்கார்ந்துக்கிட்டேன்!...மனசுகுள்ளே இந்த வேதனையைச் சுமந்துக்கிட்டு இருந்ததினால...என்னால மத்தவங்களைப் போல் சந்தோஷமா இருக்க முடியலை!...அதனாலதான் இறுக்கமாய் உட்கார்ந்திட்டிருந்தேன்!..தயவு செய்து அதுக்காக என்னைய மன்னிச்சிடுங்க!... இப்ப எல்லாமே நல்லபடியா முடிஞ்சு, கல்யாணத்துக்கு நாளே குறிச்சாச்சு...மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் மன மகிழ்ச்சியோட திரும்பிப் போயாச்சு...அதனாலதான் இந்த விஷயத்தை வெளிய விட்டேன்!...என் கணவரோட சாவு...உங்க குடும்பத்துல நடக்கப் போற ஒரு சுபகாரியத்தை எந்த விதத்திலும் தடுத்திடக் கூடாதுன்னுதான் நான் இப்படிச் செஞ்சேன்!” என்று சொல்லி விட்டு அருவியாய் கண்ணீரைக் கொட்டிய சம்பூர்ணத்தை நெகிழ்வுடன் பார்த்தார் தேவநாதன்.
தான் பாறாங்கல் என்று நினைத்த அந்தப் பெண்மணி, எப்பேர்ப்பட்ட துயரத்தை தன் மனதினுள் புதைத்துக் கொண்டு, சுலோச்சனாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும் என்பதற்காக தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு காத்திருந்திருக்கிறாள், என்பதை நினைத்துப் பார்த்து, தன்னையே நொந்து கொண்டாள் அர்ச்சனா. “ச்சே!...பெரிய மனுஷி....பெரிய மனுஷிதான்!”
வெளி உலகத்திற்கு ஒரு ராட்சஸியாய் இருந்த அந்த சம்பூர்ணத்திற்குள் இப்படியொரு இங்கித குணமா? என்று பக்கத்துப் போர்ஷன் நரசிம்மனும் வாயடைத்துப் போனார்.
தொடர்ந்து தேவநாதனும், நரசிம்மனும் அந்த சம்பூர்ணத்திடம் நாசூக்காய்ப் பேசி, முக்கிய