தொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 04 - சுபஸ்ரீ
அனைவருக்கும் வணக்கம்,
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு சந்திக்கின்றோம்,
என் உடல்நல பாதிப்பினால் மருத்துவமனையில் பல நாள் சிகிச்சை . . அதற்கு அடுத்து சற்றும் எதிர்பாராத என் தாயின் மரணம் என ஒன்றன்பின் ஒன்றாக பல வேதனையான நிகழ்வுகள் நடந்தேறிவிட்டது.
அதனால் தொடர்ந்து கதை எழுத இயலவில்லை. மன்னிக்கவும்.
கருப்பு வெள்ளை வானவில் கதையின் முந்தைய அத்தியாயங்கள்
இதோ அடுத்த அத்தியாயம் . . .
சுபஸ்ரீ
கருப்பு வெள்ளை வானவில் 4
பீஷ்மர் மகாபாரதத்தில் தலைசிறந்த வீரர். பிரம்மச்சரிய விரதத்தை அனுஷ்டித்தவர். அதன் காரணத்தால் மரணம் கூட அவர் விருப்பம் இல்லாமல் அவரை நெருங்க முடியாது என்னும் பெரும் வரத்தைப் பெற்றவர்.
ஆனால் அத்தகைய மாபெரும் வீரர், மஹாபாரத யுத்தத்தில் அம்பு படுக்கையில் சாய்ந்தார். அவரின் ஒவ்வொரு சொட்டு குருதியும் யுத்த பூமியை நனைத்தது. வீரர், தர்ம வழி நடப்பவர், பல சக்திகளை உடையவர். அவருக்கு ஏன் இந்த கதி?
காரணம் அவர் அதர்மிகளுக்கு துணை நின்றார். பாஞ்சாலி துகிலுரியும் தருணத்தில் அவர் தடுக்க முற்பட்டாலும் . . தான் அரசனின் ஆணையைப் பின்பற்றுபவன் என்னும் சித்தாந்தம் அவரை முழுமையை அச்சம்பவத்தை எதிர்க்க இயலவில்லை. தர்ம வழியில் அதர்மம் செய்தலும் அது தண்டிக்கத்தக்கதாகும்.
அச்சடித்து வந்திருந்த தன் நிச்சயதார்த்த அழைப்பிதழை தனுஷ் மீண்டும் மீண்டும் ரசித்துப் பார்த்தான். ”எல்லா சரியா இருக்கா பிக் ப்ரோ?” என தனுஷின் தம்பி சஞ்சய் கேட்டான். அவன் கைகள் காரின் ஸ்டியரிங்கில் இருந்தது என்றாலும் கண்கள் பத்திரிக்கையை நோக்கியவண்ணம் இருந்தது.
”ம்ம் . . சரியா இருக்கு . . ரோட்ட பாத்து வண்டி ஒட்டுடா”செல்லமாய் கடித்தான்
”அதெல்லா எங்களுக்குத் தெரியும் . . இன்விடேஷனைப் போட்டோ எடுத்து அண்ணிக்கு வாட்ஸ்அப்புல அனுப்பு”