தொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 03 - சுபஸ்ரீ
காதல் எதற்க்கும் அகப்படாமல் ரெக்கை கட்டி பறக்கும் வல்லமை படைத்தது. காதல் யாதெனில் உயிர், உரிமை, உணர்வு, புதிர் எனப் பல பரிணாமங்களைக் கொண்டது.
தனுஷ் பிருந்தா காதல் விவரிக்க இயலா உணர்வுகளை கொண்டிருந்தது. அவர்கள் ஒருவருடன் மற்றவர் அதிகம் பேசவில்லை எனினும் அவர்ளுக்குள் புரிதல் இருந்தது. தனுஷ் போன் செய்யவில்லை என பிருந்தா ஆதங்கம் பட்டதில்லை. வேலை அதிகம் இருந்திருக்கும் என சமாதானம் அடைவாள்.
தனுஷ் மற்றும் அவன் குடும்பத்தார் மீது பற்றுதலும் மரியாதையும் இருந்தது. பிருந்தாவின் கசப்பான கடந்த காலம். அவள் வருங்காலத்தை இனிதே முழுமனதோடு ஏற்க இயலாமல் வஞ்சித்தது.
தனுஷ் இதயத்தில் பிருந்தா மேலான காதல் தழும்பி வழிந்தது. ஆனால் அக்காதலை தன் மனதில் பூட்டி வைத்தான். அவனிற்கும் ஆசைதான் தன்னவளுடன் போனில் அளவளாவ வேண்டும். மாலை வெயிலில் அவளுடன் கைக் கோர்த்தபடி நடக்க வேண்டும். இன்னும் பலப்பல கனவுகள் இருந்தன.
ஆனால் பிருந்தாவின் பால் மனம் சென்றால் தன் எதிர்கால கனவு என்னாவது? தாத்தாவை தொழிலில் மிஞ்ச வேண்டும் என்னும் வைராக்கியம் அவன் காதலை சற்றே பின்னுக்கு தள்ளியது.
காலம் மனிதனை சிறைவைப்பதில்லை. மனிதன் தான் காலத்தினுள் சிறைப்படுகிறான். எதிர்கால நிகழ்விற்கு அழைப்பிதழ் தேவையில்லை அதேபோல் கடந்தகாலத்திற்கு ஆவணங்கள் தேவையில்லை. இருவரும் இதை உணரவில்லை.
“தனுஷ் அண்ணி வந்துட்டாங்க” சஞ்சய் தனுஷ் தோளில் கைவைத்தான்.
செல்போனில் இருந்து தனுஷ் கண்கள் மெல்ல உயர்ந்து பிருந்தாவை நோக்கின. தங்க சிலை போல இருந்தாள். சல்வார் கமீஸ்சில் அன்றைய தினத்தை விட அழகு கூடியிருப்பதுபோல் தோன்றியது. அலைபாயும் விரிந்த கூந்தல். அதிக ஒப்பனை இல்லாத முகம்.
அவள் மட்டுமே அவன் கண்ணுக்குத் தெரிந்தாள். அவளை கண்டதுமே அவன் அனுமதியின்றி அவன் இதழ் புன்னகை பூத்தது. மகுடி இல்லாமலே மனம் அடங்கியது. அவனின் பார்வையை உணர்ந்த பிருந்தா மெல்லிய புன்முறுவலுடன் தலை குனிந்து மீண்டும் அவன் மேல் கண்கள் பதித்தாள்.
இத்திருவிளையாட்டை மற்றவர் கவனித்தும் கவனியாததுப் போல இருந்தனர். அவர்கள் மனதில் நிம்மதி. “இதுக்கு தானே ஆசை பட்ட பாட்டி?” என சஞ்சய் விழி வழியே கேட்க “ஆமாண்டா பேராண்டி” அவரும் அவ்வழியே பதில் அளித்தார்.