தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 24 - சகி
"தர்மாம்மா பையன் வந்திருக்கிறாராம்கேள்விப்பட்டியா?" ஆலயத்தில் கண்கள் மூடி இலயித்திருந்தவரின் கவனத்தினை ஈர்த்தது இரு பெண்டிரின் குரல்.
"ஆள் பார்க்க மகராசன் மாதிரி இருக்கான்டி! ஜில்லா கலெக்ட்ராம்!" அவர்கள் பெருமைக் கொண்ட விதம் பார்வதியை வெகுவாகத் துளைத்துச் சென்றது.
"தர்மாம்மாத் தான் இறந்துட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்!" என்றதும் அத்தாயின் மனம் சட்டென துணுக்குற்றது. கோபம் இருந்தாலும் இல்லையென்றாலும் அவரதுப் புதல்வியல்லவா!
"வைராக்கியம் அதிகம் அவங்களுக்கு! கடைசி வரைக்கும் ஊர் மண்ணை மிதிக்கவே இல்லை. இருந்தாலும், பார்வதியம்மா மன்னித்துவிட்டிருக்கலாம். இனி அவங்களுக்கு என்ன நாதி இருக்கு?" என்றது கவலைரேகைகள் அவர் முகத்தில் படர்ந்தன. ஆம்..! இனி நாதி என்று என்னத்தான் இருக்கிறது? இருவேறு விசித்ரமான தாத்பரியங்கள் யுத்தக்களத்தில் சந்திப்பதுப் போல எதிரெதிர் அணியில் நம்மை துன்புறுத்துக்கின்றன. உற்றோர் உறவினர் கொள் இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றது வாழ்வியல்; சுற்றம் பெற்று ஏற்றம் கொள்வாயா? அனைத்தையும் நீங்கு! இறுதியில் எவரும் துணைக்கொள்ள போவதில்லை. இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றது வாழ்க்கை! பற்றுக் கொள்வதா? விட்டொழிப்பதா? நிலையாமை நிலைப்பெற்ற பூமியில் நிலைத்து நிற்பது நிழல்களின் ஆட்சியா? என்னத்தான் செய்யப் போகிறோம்? எப்படித்தான் வாழ்வது? எண்ணற்ற வினாக்கள் அனைவருக்கும் உண்டல்லவா! எப்படி வேண்டுமானாலும் வாழலாம் வையத்தில்! தடுக்கும் சக்தி எவருக்கும் இல்லை. மனிதன் சுதந்திரமானவன்; அவன் செயல்களும் அத்தகையதே! சுதந்திரமாக எதனையும் நாம் செய்யலாம்; அச்செயல் நிகழ்ந்து முடியும்வரை நமக்கு சுதந்திரம் உண்டு. ஒருமுறை வெறும் ஒருமுறை அச்செயலை செய்து முடித்துவிட்டால் அதன் பலன்கள் கர்மத்தின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். அட... ! நானும் தான் பார்க்கிறேன், வையத்தில் வாழ்வாங்குக் காலம் வாழ்வோன் எல்லாம் புண்ணியம் சேர்த்தவன் இல்லையே! நன்மை புரிவோர் வேதனை மட்டுந்தானே பெறுகின்றனர்? அப்படியா? அதுவா நிகழ்கிறது?இல்லை...வாழ்வில் ஏற்படும் வேதனைகள், சங்கடங்கள் எல்லாம் கர்மபலன் ஆகிவிடாது! யுத்தக்களத்தில் தேர்ந்த போர்வீரன் ஒருவன் வாள் சுழற்றும் வித்தையை கற்க அவன் பலமுறை கூரிய வாள்கொண்டு காயம் பெற்றிருக்க வேண்டும்! அவ்வேதனையின் வெளிப்பாடே அவனுள் பொதிந்திருக்கும் வீரம்! இங்கு நிலையாமை கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நிலையாமையால் உருவாக்கப்படும் பணம், பதவிக்கு நிலைப்பெற்றிருக்கும் செயல்வினைகள் அவர்களுக்கு மட்டுமானவை! அது மற்றவரின் கண்களுக்குப் புலப்படாதது. பின், இவ்வாழ்வில் எதனைத் தேர்ந்தெடுப்பது? எவ்வாறு அனைத்திலிருந்தும் முக்திப் பெறுவது?முக்தி என்பதோ மோட்சம் என்பதோ சந்நியாசம் என்பதோ ஒருவர் தம்மிடத்தில் எதனையும் கொண்டிருப்பதில்லை என்றுப் பொருள்படாது! எப்பொருளும்