நல்கிக் கொண்டிருந்தான். உறவுகளில் மகத்துவம் அவனுக்குப் புரியத் தொடங்க, இனி தீய வழியில் செல்ல மாட்டான் என்ற நம்பிக்கை மட்டும் அவருடையதாய்! ஆயினும் ஒற்றை வினா அவரைத் துன்புறுத்திக் கொண்டே இருந்தது. மகனின் வருகை உணர்ந்தும், தாயானவள் எங்குத் தான் சென்றிருப்பாள்!?
அன்றைய இரவு...!
மறுநாள் விடியாமலே போகட்டும் என்ற சிந்தனையோடு உழன்றுக் கொண்டிருந்தான் அதர்வ். நிகழும் நிகழ்வுகள் யாவும் அவனுக்கு எதிராக செயல்படுவதாகவே ஓர் எண்ணம் அவனுக்குள்!
அசோக் ஆற்றிய செயல் அன்று குரோதத்தினை வளர்த்திருந்தாலும், தன் மனைவியினை வேற்றொருவன் அவமதித்தால் யாருக்குத் தான் கோபம் வராது என்ற வினாவையும் தனக்குத் தானே தொடுத்துக் கொண்டான் அவன். அப்படியிருக்க எவ்வாறு அவ்விருவரையும் எதிர் கொள்வது என்ற சந்தேகம் அவனை வாட்டம் காணவே செய்ய, அலறிய அவனது கைப்பேசி அவனதுச் சிந்தனை ஓட்டத்தினைக் கட்டுப்படுத்திச் சென்றது.பெயர் ஏதம் வாரா எண்ணங்களின் அழைப்பினைக் கண்டவன், கேள்வியோடு அதனை உயிர்ப்பித்துத் தன் செவிகளில் வைத்தான்.
"ஹலோ!" மறுமுனை சில நொடிகள் எவ்வித பதிலையும் கூறவில்லை.
"யார் வேணும்?" மீண்டும் அவன் வினா எழுப்ப, தொண்டையினைச் செறுமிக் கொண்டு பேசியது ஓர் ஆண் குரல்!
"அசோக் பேசுறேன்!" என்றதும் இவனிடமிருந்த குரலும் நின்றுப்போனது ஓர் நொடி! சோதரர் இருவருக்கும் என்னவென்று உரையாடுவது என்பதே மாபெரும் குழப்பமாய் ஆனது.
"ஆரம்பத்தில் இருந்து உனக்கும் எனக்கும் நிறைய மனஸ்தாபமிருக்கு அதர்வ்! நான் அதையெல்லாம் இங்கே பேசணும்னு வரலை. எனக்கு உன் மேலே தனிப்பட்ட பகை எதுவும் கிடையாதுன்னு புரிந்துக்கொள்! நானோ, சிவன்யாவோ உன்னை வெறுத்ததுக் கிடையாது!" அவன் பேசுவதனை எல்லாம் கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தவனின் விழிகள் ஏனோ தன்னிச்சையாய் கலங்கிட செய்தன.
"நீ இங்கே வருவதில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்! எல்லாத்தையும் மறந்து இனி எல்லாரும் சந்தோஷமா வாழலாம்! நாம ஒரே குடும்பம்டா! நீ என் தம்பி!" அவ்வார்த்தைகள் அவனை ஆழமாய் ஊடுருவி செயலிழக்க வைத்தது.
"நாளைக்குக் கிளம்பி ஊருக்கு வா! எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்!" அவ்வளவு நேரமும் அவன் உரையாட, அனைத்திற்கும் இளையவனிடத்திலிருந்து வந்ததெல்லாம், "ம்" என்ற பதில் மட்டுமே! இணைப்பினைத் துண்டித்தவனது மனதில் எழுந்ததெல்லாம் ஒற்றை வினாவே,
"நான் ஏன் தர்மாவின் புதல்வனாகப் புவியில் பிறக்கவில்லை?" என்பதே!
மறுமுனை இளவலுடன் உரையாடிவிட்டு இணைப்பினைத் துண்டித்தவனின் எதிரில் அமர்ந்து