எல்லாரும் பழைய காலம் மாதிரி நடந்தே போகலாம் . . இனி கார் வேணாம்னு நினைச்சா நீ என்னடா பண்ணுவ?” தாத்தா கேட்க
“அயோ நாம பிச்சைதான் எடுக்கணும்” சஞ்சய் பதறியபடி பதில் அளித்தான்.
“யாரோ நடந்து போன உனக்கு என்ன பிரச்சனை?”
“யாருமே கார் வாங்கலைனா நம்ம பிசினஸ் டௌன் ஆகிடுமே?”
“ஒருத்தன் பட்டுபுழுவை சேர்த்து அதிலிருந்து பட்டு எடுத்து வித்து வருமானம் பண்ணுவான். அடுத்து அவன்கிட்ட இருந்து பட்டு வாங்கி புடவை நெசவு செய்வான்.”
“ஒரு பட்டு புடவைக்கு குறைஞ்சது ஆறேழு பேர் உழைப்பு இருக்கு. நீ பட்டுப்புடவை வாங்கினா இத்தனை பேர் சாப்பிடுவாங்க. இதுதான் சமூக கட்டமைப்பு. ஒருவர் மற்றவரோடு இணைந்து செயல்படனும்.”
“புடவைனு இல்ல கல்யாண போட்டோகிராப்ர், லைட் மியூசிக் பாடறவங்க இவங்க எல்லார் வாழ்க்கையும் என்ன ஆகும்? இது ஆடம்பரம்னு எனக்கு தோனல . . அவங்க வாழ்வாதாரமா நினைக்கிறேன்” தாத்தா சொல்ல
“கல்யாணத்துக்கு வரவங்கல எத்தனையோ பேர்க்கு சுகர் பிபி இருக்கும். அதுக்காக எல்லார்க்கும் மிளகு ரசம் தயிர் சாதம் போதும்னு நினைக்கிறோமா? . . விதம்விதமா சப்பிடறோம்ல” அப்பாவும் சேர்த்துக் கொண்டார்.
“மூர்த்தி தம்பி முதல்ல சொன்னதுதான் இப்பவும் சொல்றேன். . கல்யாண் செலவு நாங்கதான் பண்ணுவோம். இப்பவே சொல்லிட்டேன்” தாத்தா கண்டிப்பாக சொல்லிவிட்டார்.
இதை முன்னமே சொன்னதுதான். மூர்த்தி அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. எதோ சம்பிரதாய பேச்சு என நினைத்தான். ஆனால் இப்போது தீவிரம் புரிந்தது. ஆனால் அவனோ தன் தங்கைக்கு விமர்சையாக கல்யாணம் செய்ய எண்ணியிருந்தான். இருகுடும்பத்திற்கும் பணம் ஒரு பிரச்சனை இல்லை.
மூர்த்தி தன் அம்மாவிடம் பேசிவிட்டு பதில் சொல்லலாம் என் மௌனம் காத்தான். வரதட்சணை வேண்டாம் என்று பெண் பார்க்க வரும் முன்னரே சொல்லிவிட்டார்கள். அவர்கள் சொன்னார் என்பதற்காக நாம் செய்யாமல் இருக்க முடியாது என தாய் அன்றே சொல்லிவிட்டார்.
ஆண்கள் ஐவரின் பேச்சு அரசியல், சினிமா, கிரிக்கெட், செவ்வாய் கிரகதிலிருந்து நிலவுக்கும் சென்று திரும்பியாயிற்று. இன்னும் புடவை செலக்க்ஷன் முடிந்தபாடில்லை. தனுஷ் அவ்வபோது பிருந்தாவை பார்வையால் தழுவினான்.
சஞ்சய் கால் மாற்றி மாற்றி நின்றான். கால் வலி அதோடு லேசாய் பசிக்கவும் செய்தது. கடை நிரம்பி வழிந்ததால் அமர இருக்கையும் இல்லை . “அப்பா பசிக்குது” என தன் அப்பாவின் தோளில் சாய்ந்துக் கொண்டான்.