தொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 02 - சுபஸ்ரீ
கடவுள் அவதாரமான ஸ்ரீ ராமனுக்கும் ராவணனுக்கும் யுத்தம் நடக்கையில் ராமர் ராவணனின் இதயத்தை நோக்கி எப்பொழுதும் தன் பாணத்தைச் செலுத்தியதில்லை என்றொரு கூற்றுண்டு.
அதற்கான காரணம்
ராவணன் இதயத்தில் சீதை உள்ளாள் .
ராவணன் இதய சீதையின் உள்ளத்தில் ராமர் உள்ளார்.
அந்த ராமர் உள்ளத்தில் உலக மக்கள் உள்ளனர்.
ராவணன் இதயத்தில் பாணத்தைச் செலுத்தினால் அது சீதை மற்றும் உலக மக்களையும்த் தாக்கும்.
இப்படித்தான் தனுஷின் தாத்தாவான குருராகவன் தன் பேரன் தனுஷை இதய சிம்மாசனத்தில் அமர்த்தியுள்ளார். தனுஷ் துன்பப்பட்டால் தாத்தாவிற்குத் தாங்காது. தாத்தாவிற்குத் துயரமெனில் தனுஷினால் பொறுக்க இயலாது.
குருராகவன் தாத்தா உழைப்பின் மறுபெயர். கடின உழைப்பினால் முன்னுக்கு வந்தவர். அவமானம், நிராகரிப்பு, தோல்வி எனப் பல கசப்பான நிகழ்வுகளைக் கண்டவர். ஆனால் ஒரு நாளும் தன் இலக்கிலிருந்து பின்வாங்கியதில்லை. அவரின் கடின உழைப்பிற்கு உறுதுணையாக நின்றவர் அவரின் மனைவி காவேரி .
குருராகவன் காவேரி தம்பதிகள் பெற்றெடுத்த செல்வங்கள்தான் மகன் ராமகிருஷ்ணன் மற்றும் மகள் மைதிலி.
தனுஷ் மற்றும் சஞ்சயின் பெற்றோர் ராமகிருஷ்ணன் மற்றும் சாந்தி.
மைதிலி ரகு தம்பதி குடும்பம் திருச்சியில் உள்ளது.
தாத்தா பாட்டி என்பது ஓர் அருமையான உறவு. முதுமை என்பது ஓர் வரமே. வாழ்க்கை என்னும் பல்கலைக்கழகத்தில் அனுபவ அறிவை கற்றவர்கள். அவர்கள் மடியில் அமர்ந்து கதை கேட்கும் பிள்ளைகள் ஒரு வகையில் பாக்கியசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும் . தான் பெற்ற பிள்ளைகளைவிட, தன் பிள்ளைகள்ப் பெற்று எடுக்கும் மழலைகள் மேல் தாத்தா பாட்டிக்கு என்றுமே பாசமும் பிரியமும் அதிகம்.
ராமகிருஷ்ணன் “ ஏண்டா படுத்தாம இருக்க மாட்டிய?” என தனுசைக் கடிந்து கொண்டால்
“நீ பண்ணாத குறும்ப விட வா தனுஷ் பண்றான் . . . சும்மா இருடா எப்பபாரு என் பேரனை எதாவது சொல்லிட்டு” எனத் தாத்தா சேம் சைடு கோல் போட்டுவிடுவார். ஆனால் தாத்தா செல்லம்க் கொடுத்து தனுஷைக் கெடுக்கவில்லை. விளையாட்டு படிப்பு எதில் அவன் விருப்பமோ அதில் அவன் மிளிர வேண்டுமென எண்ணினார். தனுஷ் நன்றாகப் படித்தான்.