சௌமியை அடக்க சாவித்ரி மற்றும் சாராதா முயன்று முடியாமல் போக . . இறுதியில் மூர்த்தி வெற்றி கண்டான். “அக்கா கூப்பிடறமா” என சொல்லி அவள் வாய்க்கு பூட்டு போட்டான்.
சௌமியோ “கொஞ்சம் ஓவராதான் போயிட்டோமோ . .” வடிவேலு ரேஞ்சில் யோசிக்க “ இன்னிக்கி நமக்கு ஸ்பெஷல் கச்சேரிதான் ” முணுமுணுத்தபடிச் சென்றாள்.
அவளை அவள் குடும்பம் டெரர்ராக லுக்விட தன் ரூமிற்குள் தற்காலிகமாக தஞ்சம் புகுந்தாள். “ சிவனேனு இருந்த என்னை இந்த தாத்தா எதுக்கு கேக்கணும். இப்ப மொத்த குடும்பமும் கொலை வெறில இருக்கே . . “ என புலம்பினாள்.
ஜோதிடர் போன் செய்து சில தேதிகளைச் சொன்னார். தாத்தா அனைவரிடமும் கலந்தாலோசித்தார். இன்னும் பதினைந்து நாட்களில் நிச்சயதார்த்தமும் இரண்டு மாதத்தில் திருமணம் என முடிவானது.
சாவித்திரிக்கு மனம் நிறைந்தது. கண்ணீர் சுரப்பிகள் வேலையைத் தொடங்க அதை உள்ளிழுத்து அடக்கினாள்.
அனைவரும் கிளம்ப எத்தனிக்க . . நிச்சயத்திற்கு முன் வெற்றிலை பாக்கு தாம்பூலம் தரக்கூடாது என்பதால் சாரதா குங்குமம் மட்டுமே கொடுத்தாள் . பாட்டி வகிட்டில் இட்டுக்கொண்டு பிருந்தாவை அழைத்து அவள் நெற்றியில் குங்குமமிட்டர்.
பெரியவர்கள் முன்னே செல்ல தனுஷ் மற்றும் பிருந்தா தனியே விடப்பட “போயிட்டு வரேன்” அவன் மென்மையாகச் சொல்ல “ம்ம் வாங்க” என்றாள் வெட்கம் கலந்த புன்னகையுடன். முன்பைவிட இரண்டு மில்லிமீட்டர் அவள் புன்னகை பெரியதாகி இருந்தது. அதை தனுஷ் கண்கள் அழகிய கோணத்தில் படம் பிடித்தது.
நந்தியாய் நுழைந்த சஞ்சய் “அண்ணி உங்க போன் நம்பர் சொல்லுங்க” என தனுஷ் கையிலிருந்து போனை பிடுங்காத குறையாக வாங்கி பிருந்தா சொன்ன நம்பரைப் பதிந்து ஒருமுறை கால் செய்து மீண்டும் தனுஷிடம் “ மறந்துட்டல உன்னபத்தி எனக்குத் தெரியாத” என முறைத்தபடி கொடுத்தான்.
தனுஷ் இருந்த மனநிலையில் போன் நம்பர் கேட்க மறந்துவிடுவான். சஞ்சய்க்கு தன் அண்ணனை பற்றி நன்கு தெரியும் அதனால்தான் இப்படிச் செய்தான். தனுஷ் மனதார தம்பிக்கு நன்றி சொன்னான்.
பிருந்தா உள்ளத்தில் ஆழிப்பேரலையாய் உழன்ற நிகழ்வுகள் புதைய தொடங்கின. தன் ஊன் உடல் உள்ளம் அனைத்துமே தனுஷிற்கே என மனதார சங்கல்பம் செய்துக்கொண்டாள்.