உட்காரு “ தனக்கு அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டார்.
“ சௌமி “நின்றபடி சொன்னாள்.
“உட்காருமா“ பாட்டியும் சொல்லவே .. . அமர்ந்தாள்
“என்ன படிக்கிற?” - தாத்தா
“விஸ்காம் பைனல் இயர்”
“முடிச்சிட்டு என்ன செய்ய போற ?“
“படம் டைரக்ட் பண்ண போறேன் “ மலர்ந்த முகத்துடன் கூறினாள்
அவள் பதிலைக் கேட்ட தனுஷ் குடும்பத்தினர் “வாவ்” “சூப்பர் மா” எனச் சிலர் பாராட்ட சௌமிக்கு கால் தரையில் நிற்கவில்லை.
“வெரி குட் . . . டைரக்டர் ஆகத் தான் விஸ்காம் படிக்கிறியா ?” தாத்தா கேட்க
“ஐயோ இல்ல தாத்தா . . இன்ஜினியரிங்ல இருந்து தப்பிக்க . . .”
“ புரியலையே”
“இங்க அண்ணா அக்கா ரெண்டுபேரும் இன்ஜினியரிங் . . ஆனா டிவி ரிமோட்,க்கு பேட்டரி மாத்தனும் , டியூப்லயிட் மாட்றது, பியூஸ் கட்டை போடறது இப்படி சில்லறை வேல கொடுத்து கேவலப்படுத்துவங்க பாருங்க கண்கொள்ளாக்காட்சியா இருக்கும் . சரியாய் செய்யலைன்னா என்னத்த இன்ஜினியரிங் படிச்சன்னு வறுத்தெடுப்பாங்க “
“இது கூட பரவல்ல தாத்தா . . . அம்மா குக்கர் வெச்சிட்டு திடீல்னு அக்காவை “எத்தனை விசில்டி ஆச்சுனு ?” கேப்பாங்க . . அவ செல்போன் நோண்டிட்டே தப்பா சொல்லுவ . . இன்ஜினியரிங் படிச்சிருக்க ஒன்னு ரெண்டு கூட கவுண்ட் பண்ணத் தெரிலன்னு கதாகாலேட்சபம் ஆரம்பிச்சா கடவுளே ஓடிப்போய்டுவார் . அதனால்தான் சின்னப்பவே முடிவு பண்ணிட்டேன். இன்ஜினியரிங் படிக்கக் கூடாதுனு”
அறையினுள் இருந்த பிருந்தாவிற்கு அத்தனையும் துல்லியமாய் காதில் விழுந்தது. சௌமி தன் மானத்தைக் கப்பல் ஏற்றுவது தெரிந்து “முருகா “ என நொந்துக் கொண்டாள். கோபம் வராமல் சிரிப்பு தான் வந்தது. தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு வியந்தாள்.
சௌமி சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரித்துவிட்டனர். “ உன் அக்காவ எங்க வீட்ல குக்கர் விசில் கவுண்ட் பண்ணச் சொல்லவே மாட்டோம் மா ” என்ற பாட்டி தனுஷை பார்த்துக் கண்சிமிட்ட தனுஷ் கூடத் தன்னை மறந்து பெரியதாகச் சிரித்துவிட்டான் .
இன்னும் கொஞ்ச நேரம் சௌமியை பேச விட்டால் குடும்ப மானம் கப்பலேறிவிடும் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை.