தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 18 - முகில் தினகரன்
மறுநாள் மாலை ஆறு மணி.
உப்பாயம்மன் கோவிலில் வழக்கத்தை விட கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. இரண்டு தினங்களுக்கு முன் ரவீந்தருக்கு நிகழ்ந்த அந்த ஆன்மீக அனுபவம், பலரை பக்திமான் ஆக்கியிருந்தது. போதாக்குறைக்கு அந்த பால்ராஜும் தன் குலத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டிற்கெல்லாம் நேரிலேயே சென்று தங்கள் குல தெய்வமான உப்பாயம்மனின் மகிமையை சொல்லிச் சொல்லி அவர்களை கோவிலுக்கு வரவழைத்துக் கொண்டிருந்தான்.
கோவிலுக்குள் நுழைந்த கோகுல் அம்மனை வணங்கி விட்டு அங்கிருந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வது போல் நடித்துக் கொண்டிருந்தான்.
சற்றுத் தள்ளி நின்று அவனையே கவனித்துக் கொண்டிருந்த பால்ராஜ் உடனிருப்பவனிடம் கேட்டான், “அவன் யாரு?...அவனை இதுக்கு முன்னாடி நம்ம ஊர்ல பார்த்ததே இல்லையே?”
“அதைத்தான் பால்ராஜ் நானும் யோசிச்சிட்டிருக்கேன்?...வந்தான்...சாமி கும்பிட்டான்!...கோயிலை வலம் வந்தான்...அப்புறம் மண்டபத்துல வந்து உட்கார்ந்து தியானம் பண்ண ஆரம்பிச்சிட்டான்” என்றான் அவன்.
“அவன் மூஞ்சியைப் பார்த்தாலே நிச்சயம் அவன் நம்ம குலத்து ஆள் இல்லை!ன்னு தெளிவாய்த் தெரியுது!...அப்படியிருக்கும் போது அவனை யார் உள்ளே விட்டது?” பால்ராஜ் கோபமாய்க் கேட்க,
“இருங்க ஸ்வாமிஜியைக் கூட்டிட்டு வருவோம்” என்று சொல்லி விட்டு வேக வேகமாய் நடந்தான் அந்த இன்னொருவன்.
சில நிமிடங்களில் திரும்பி வந்தவன் கையோடு சுதாகர்ஜியையும் கூட்டி வந்தான். அவரிடம் பால்ராஜ் கேட்டான். திரும்பி அவனைப் பார்த்த சுதாகர்ஜி, உதட்டைப் பிதுக்கி விட்டு, “எனக்கும் தெரியலை...கடந்த ஒரு மணி நேரமாகவே அவன் கோயிலுக்குள்தான் இருக்கிறான்” என்றார்.
“ம்ஹூம்...இதை இப்படியே விடக் கூடாது!,,,விட்டா நம்ம குலதெய்வம் கோயிலுக்குன்னு இருக்கற மரியாதை காத்தோட போயிடும்!...அதனால...மொதல்ல அவனைக் கூப்பிட்டு விசாரிப்போம்” என்றான் பால்ராஜ்.
“எதுவானாலும்...கொஞ்சம் அமைதியா விசாரிபோம்...எடுத்த எடுப்பில் கோபத்தைக் காட்ட வேண்டாம்!...அதனால...நான் பேசறேன்...நீங்கெல்லாம் அமைதியாய் இருங்க” என்ற சுதாகர்ஜி, உடனிருந்தவனை அனுப்பி கோகுலை அழைத்து வரச் சொன்னார்.
அவன் “விடு..விடு”வென்று சென்று, கண்களை மூடியபடி அமர்ந்திருந்த கோகுலின் அருகில் நின்று, “இந்தாப்பா...கொஞ்சம் கண்ணைத் திறந்து பாரு” என்றான்.
நிதானமாய்க் கண்களைத் திறந்த கோகுல், “என்னங்க?” என்று அமைதியாய்க் கேட்டான்.