திரும்பி சுதாகர்ஜியைப் பார்த்து விட்டு, “உன்னைய சாமி வரச் சொல்லுறார்” என்றான்.
“ஸ்வாமிஜியா?...என்னையா?” என்று கேட்ட கோகுல் உடனே எழுந்து அவனுடன் வந்தான்.
ஆங்காங்கே நின்று கொண்டிருந்த மக்களும் அவர்களை நோக்கி வந்து நின்றனர். வேடிக்கை பார்க்கும் நோக்கம்.
வந்தவனை மேலும், கீழும் அளந்த சுதாகர்ஜி, “யாருப்பா நீ?...எதுக்கு இங்க வந்து உட்கார்ந்திட்டிருக்கே?..இது எங்க குல தெய்வம் கோயில்!னு உனக்குத் தெரியாதா?” கேட்டார்.
தன்னை விட சிறப்பாக நடிக்கும் சுதாகர்ஜியை மனதிற்குள் பாராட்டியவாறே, “அது...வந்து...உப்பாயம்மனைக் கும்பிட வந்தேன்!...கும்பிட்டுட்டேன்!...இந்த கோயிலுக்குள் உட்கார்ந்திருந்தால் எனக்குள் ஒரு புத்துணர்ச்சியும்...மனச் சாந்தியும் கிடைக்கின்றது...அதனால் கண்களை மூடி அமர்ந்திருந்தேன்!...அவ்வளவுதான்” என்றான் கோகுல்.
“நீயும் ஏதாவதொரு குலத்தைச் சேர்ந்தவனாகத்தானே இருப்பாய்?...உனக்கும் ஒரு குல தெய்வம்...அதுக்கொரு கோயில் இருக்குமல்லவா?...அங்க போய் இப்படி உட்கார வேண்டியதுதானே?..இங்க வந்து உட்கார்ந்து ஏன் எங்க ஆளுங்களைச் சங்கடப்படுத்தறே?” சுதாகர்ஜி மிகப் பொறுமையாகப் பேசினார்.
“ஸ்வாமி...நான் இந்த உப்பாயம்மனை மனதார வணங்குவதற்கும், இங்க வந்து உட்காருவதற்கும் ஒரு காரணம் இருக்கு” என்ற கோகுல், தன்னைச் சுற்றி நின்ற அந்த கும்பலை ஒரு பார்வை பார்த்தான்.
“காரணமா?..என்ன காரணம்?” சுதாகர்ஜி கேட்டார்.
“என் பேர் கோகுல்..எனக்கு சொந்த ஊர் கோயமுத்தூர்...ஒரு பதினோரு மாசத்துக்கு முன்னாடி...நான் மனம் சோர்ந்து போன நிலையில், வாழ்க்கையையே வெறுத்து...தற்கொலை முடிவோடு கால் போன போக்கில் போயிட்டிருந்தேன்!...என் கால் இந்தக் கோயில் இருக்கும் இந்த சாலையில் போகும் போது....”என்று சொல்லி விட்டு அவன் நிறுத்த, கோகுலின் தரூபமான நடிப்பை ரசித்தபடி பார்த்தார் சுதாகர்ஜி.
அடுத்து அவன் சொல்லப் போவதைக் கேட்க மக்கள் ஆர்வமாகி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்க,
“இந்த சாலையில் போகும் போது...இந்தக் கோயிலுக்குள்ளிருந்து ஒரு பெண் குரல் கேட்டது, “மகனே...எங்கே போகிறாய்?...நான் உள்ளே இருக்கேன்...வா!” என்று என்னை அழைத்தது அந்தக் குரல்!...நொந்து போன மனதோடு போய்க் கொண்டிருந்த எனக்கு...அந்தக் குரலில் இழையோடியிருந்த அன்பு ஒரு ஈர்ப்பினைத் தர, என்னையேயறியாமல் உள்ளே வந்தேன்!...சன்னதியிலிருந்த ஆத்தா முகத்தைப் பார்த்தேன்... “என்னப்பா...என்ன வேதனை