ஆரம்பத்தில் அவனைக் கோபமாய்ப் பார்த்த பால்ராஜ் கோஷ்டியும் அவனை நன்றியோடு பார்த்தது.
“ஸ்வாமி...நீங்க எனக்கு ஒரு சின்ன உபகாரம் பண்ணணும்” என்றான் கோகுல்.
“சொல்லுப்பா...உனக்குப் பண்ணாம வேற யாருக்குப் பண்ணப் போறேன்?” என்றார் சுதாகர்ஜி.
“வந்து...இந்த நேரத்துல கிளம்பிப் போனா....கோயமுத்தூர் வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமப் போயிடலாம்!...ஆனா என்னோட வீடு கோயமுத்தூருக்கு வெளியே ஒரு இருபது கிலோமீட்டர் தள்ளியிருக்கு...அங்க போறதுக்கு எந்த பஸ் வசதியோ...ஆட்டோ...டாக்ஸி வசதியோ கிடையாது!...அதனால....நான் இங்கியே எங்காவது தங்கிட்டு...காலைல நேரத்துல எந்திரிச்சுப் போயிடறேனே ஸ்வாமி”
கோகுல் அப்படிச் சொன்னதும், “எங்க வீட்டுல வந்து தங்கிக்கங்க தம்பி” என்ரு பல குரல்கள் ஒலித்தன.
தன் நடிப்பு முழு வெற்றியை எட்டி விட்டது, என்பதை அதிலிருந்தே புரிந்து கொண்டான் கோகுல்.
ரவீந்தரின் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் வெற்றியடைவதைக் கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்ட சுதாகர்ஜி, “அது ஒண்ணும் பிரச்சினையில்லை...இங்க கோயமுத்தூர்க்காரர் ஒருத்தர் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கார்...அவரோட தங்கிக்கங்க...அவர் ஒற்றை ஆள்தான்!...நான் சொன்னா ஒத்துக்குவாரு!” என்றார்.
“சாமி?...யாரைச் சொல்றீங்க?...அன்னிக்கு இங்க வந்து நம்ம ஆத்தாவைத் திட்டினானே?...அவன் வீட்டிலா இவரைத் தங்கச் சொல்றீங்க?” பால்ராஜ் கேட்க,
“கவலைப்படாதே பால்ராஜ்...அவர் இப்ப சுத்தமா மாறிட்டார்!...அன்னிக்கு பேசின பேச்சுக்கு ஆத்தா தண்டனை கொடுத்ததற்குப் பின்னாடி மனுஷன் தெனமும் இங்க வந்து சாமி கும்பிட ஆரம்பிச்சிட்டார்” என்றார் சுதாகர்ஜி.
சிறிது நேரத்தில் கோவிலைப் பூட்டி விட்டு, அந்த கோகுலைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, ரவீந்தர் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார் சுதாகர்ஜி.
தொடரும்...
Next episode will be published on 2nd Apr. This series is updated weekly on Fridays.