எண்ணிலிருந்து கால் வந்தது.
மறுமுனையில் கைலாஷ் பேசினான். அவன் குரலில் மித மிஞ்சிய பதட்டம் இருந்தது. அவன் சொல்வதைக் கேட்கக் கேட்க சம்பூர்ணத்தின் முகத்திலும் அந்தப் பதட்டம் குடியேற ஆரம்பித்தது. பேசி முடித்த பின் “அடக் கடவுளே!” என்றபடி தலையில் கையை வைத்துக் கொண்டு, அப்படியே வாசற்படியிலேயே அமர்ந்தாள் அவள். அவள் மொத்த உடலும் நடுங்கத் துவங்கியது. கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது.
ஏதோ விபரீதம் என்பதை மட்டும் புரிந்து கொண்ட பார்வதி, எடுத்த எடுப்பில் பதட்டம் காட்டாமல் தன்னைத் தானே அடக்கிக் கொண்டு, நிதானமாய்க் கேட்டாள், “என்ன சம்பூர்ணம்மா...என்ன பிரச்சினை?...அர்ச்சனாவுக்கு ஏதுமில்லையே?”. கேட்கும் போது பார்வதியின் குரல் அவளையும் மீறி கரகரத்தது.
“விருட்”டென்று தலையைத் தூக்கி பார்வதியை நேர்ப் பார்வை பார்த்த சம்பூர்ணம், “அதை என் வாயாலே எப்படிச் சொல்லுவேன் பார்வதி?” என்று கத்தி விட்டு தானே தன் தலையில் அடித்துக் கொண்டாள், “பாவிப்பசங்க!...இப்படியெல்லாமா செய்வாங்க?...இது நாடா?...இல்லை சுடுகாடா?..” என்று பொறுக்க மாட்டாமல் கூவினாள்.
சம்பூர்ணத்தின் கூவல் சத்தம் கேட்டு வீட்டிற்குள்ளிருந்து வேக வேகமாய் வெளியே வந்தார் தேவநாதன். “என்ன பார்வதி?...அர்ச்சனா எங்கே?...அவளுக்கு என்னாச்சு?” பரபரப்பாய்க் கேட்டார்.
“எனக்குத் தெரியலைங்க!....ஆனா அவளுக்கு என்னமோ ஆயிடுச்சுங்க!...என்ன?ன்னு தெரியலைங்க!...கைலாஷ் என்னமோ சொல்லியிருக்கான்!...இவங்களைக் கேளுங்க!...இவங்களைக் கேளுங்க!” பதற்றத்தில் தெளிவாகப் பேச முடியாமல் தாறுமாறாய் உளறினாள் பார்வதி.
“ப்ச்!...பார்வதி...நீ கொஞ்சம் பொறுமையாயிரு பார்வதி...நான் விசாரிக்கறேன்!” என்ற தேவநாதன் சம்பூர்ணத்தின் அருகில் வந்தமர்ந்து சன்னக் குரலில் கேட்டார். “கைலாஷ்...போன்ல என்னம்மா சொன்னான்?”
“அய்யா...வாத்தியாரய்யா...யாரோ ரெண்டு மூணு பேரு ஆபீஸுக்குளார பூந்து...தனியா இருந்த அர்ச்சனா மூஞ்சில ஆசிட்டை ஊத்திட்டு ஓடிட்டாங்களாம் அய்யா...ஓடிட்டாங்களாம்!” சொல்லி விட்டு ஒப்பாரியே வைத்தாள் சம்பூர்ணம்.
“அய்யய்யோ...ஆண்டவா...என் மகளைக் காப்பாத்து!” பார்வதியும் தன் பங்கிற்கு ஒப்பாரியைத் துவக்கினாள்.
முகம் வெளிறிப் போன தேவநாதன், “அ...அர்ச்சனா இப்ப...எங்க இருக்கா?...எப்படி இருக்கா?” தழுதழுத்த குரலில் கேட்டார்.
“சிவா ஆஸ்பத்திரில அட்மிட் பன்ணியிருக்காங்களாம்!...ஐ.சி.யூ.ல வெச்சு டிரீட்மெண்ட்