பிறக்கும் போது தான் பெண்ணானேன்
வளரும் போது தான் ஆளானேன்
உன்னால் தானே தாயும் ஆவேன்!” சமீபத்தில் வெளியான திரைப்பாடலில் இருந்த வரிகளை தான் எழுதியிருந்தாள். தாயின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது தான் ஆனால் அப்படிப் பார்த்துக் கொள்வேன் என்று தைரியம் சொல்லும் சம வயதினளைக் கண்டு வியப்பாக இருந்தது தினேஷுக்கு.
அம்மா என்னென்ன தனக்குச் செய்கிறார் என்பதை கவனிக்க ஆரம்பித்தவள். முதல் முக்கியமான விஷயம் சாப்பாடு, எனவே அவனுக்கும் சாப்பாடு எடுத்துச் செல்ல வேண்டும் என்று இரண்டு பங்காக பேக் செய்தாள்.
ரம்யா திடீரென்று ஏன் கூடுதலாக லஞ்ச் எடுத்துக் கொண்டு போகிறாய் என்றஅம்மாவின் கேள்விக்கு ஹாஸ்டல் தோழிகளுக்கு என்று பதில் சொன்னாள். ஹாஸ்டலில் தங்கி இருக்கும் பிள்ளைகள் வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட ஏங்கியிருக்கும் என்றெண்ணி அம்மாவும் ஒன்றும் சொல்வதில்லை. ஆனால் மிகுந்த ஆர்வத்துடன் அவள் சமையல் கற்க முயற்சி எடுத்ததுதான் அம்மாவிற்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது, ஏனென்றால் தனக்கு உணவு வேண்டுமென்றால் கூட அம்மா நீங்க தட்டில் சாதத்தைப் போட்டுப் பிசைந்து தாங்க என்பவள் இப்போதென்னவோ தானே சமைக்கிறேன் என்று சமயலறையில் புகுந்து வேலை செய்கிறாளே என்றுதான். காலையில் சீக்கிரம் எழுந்து தயிர் சாதம், கேரட் சாதம் என்று எளிமையாக ஏதேனும் உணவைத் தயாரித்து தினேஷுக்கும் எடுத்துச் செல்வாள். பெரும்பாலும் தினேஷின் சித்தி அவனுக்கு சமைத்துக் கொடுத்து விடுவார். எனினும் ரம்யாவிற்குத் தானும் இயன்ற மட்டும் செய்ய ஆசை. அவளிடம் பணம் சேர்ந்தால் அவனுக்கு நேர்த்தியான சட்டை வாங்கித் தருவாள். ரம்யாவுக்குக் குழந்தைகள் என்றாள் ரொம்பப் பிடிக்கும். குழந்தைகளைப் போலிருக்கும் அழகிய பொம்மைகளையும் பிடிக்கும். ஒரு கடையில் அவள் கண்ட ஒரு குழந்தை பொம்மையை ரம்யாவுக்குப் பிடித்திருக்க, அதைப் பற்றி தினேஷுக்குத் தெரிந்த கணமே, அந்த குழந்தை பொம்மையை அவளிடம் வாங்கிக் கொடுத்துவிட்டான். அவர்கள் இருவருக்கும் செல்லமாக இருக்கும் அந்த பொம்மைக் குழந்தைக்கு அச்சுக்குட்டி என்று பெயரிட்டனர்.