அனிச்சையாய் மணிக்கட்டை உயர்த்தி நேரத்தைப் பார்த்தான்.
மணி ஒன்று...முப்பது.
“சரிதான்...வேலையை ஆரம்பிச்சிடுச்சுக போலிருக்கு!...” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவன் தொடர்ந்து அந்த வாடை அபரிமிதமாய் அதிகரிக்க மூச்சு விட முடியாமல் திணறினான். அந்தச் சிரமத்துடனேயே ராதிகாவை மொபைலில் தொடர்பு கொண்டான்.
“ம்...சொல்லுப்பா!” ராதிகாவில் குரல் கேட்டது.
“ராதிகா...அதுக வேலையை ஆரம்பிச்சிடுச்சுக..” கிசுகிசுத்தான்.
“எப்படிச் சொல்றே?”
“காத்துல பொணம் எரியுற வாடை ஆளையே திணறடிக்குது!...சரி...சரி...என் தொப்பிக் காமிராவுல இப்ப என்ன வியூ ஆகுதுன்னு சொல்லு?”
“ம்ம்ம்..நீ நாலாப்பக்கமும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்க்கறே....இப்ப நிதானமா ஒவ்வொரு இடத்தையும் நிறுத்தி நிறுத்திப் பார்க்கறே...எல்லாம் வரிசையாத் தெரியுது!” மானிட்டரைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்/
“ம்ம்...அதுல ஏதாவது வித்தியாசமாத் தெரிஞ்சா உடனே என் கிட்டச் சொல்...என்ன?”
சரிப்பா!”
அப்போது வாட்ச்மேன் கூண்டின் மீது மழைத்துளிகள் விழுவது “சட...சட”வென சப்தம் கேட்க
ராதிகா மறுமுனையிலிருந்து கேட்டாள் “என்னப்பா மழைத் துளி விழறாப்புல சத்தம் கேட்குது?”
குனிந்து சிமெண்டுத் தரையைப் பார்த்த முகிலன் அரண்டு போனான். ரத்தத்துளிகள் அந்த சிமெண்டுத் தரையில் புள்ளிக் கோலம் போடத் துவங்கியிருந்தன.
“ராதிகா நீ சொன்ன மாதிரியே மழைதான்...ஆனால் இது சாதாரண மழையில்லை!...ரத்த மழை!”
“ஹேய்...எ...என்ன சொல்றே?...ர...ரத்த மழையா?” ராதிகாவின் குரல் தொளதொளத்தது.
“யெஸ்...மொதல்ல பிணம் எரியுற வாடை...இப்ப ரத்த மழை...அடுத்து இன்னும் என்னென்ன வரப் போகுதோ?..எனி வே...எல்லாமே வித்தியாசமான அட்வென்ச்சர்ஸ்!...இந்த அஸைன்மெண்ட் எனக்கு பெரிய பதவியைப் பெற்றுத் தரப் போகுது” என்றபடி தலையை மேலே தூக்கிப் பார்த்த முகிலன் திடுக்கிட்டுப் போனான்.
மூன்றாவது தளத்தில் அந்தக் கடையில் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. உள்ளே யாரோ இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தார்கள்.