நடமாட்டம் தெரியும்...அதையும் கவர் பண்ணனும்...என்ன...புரிஞ்சுதா?”
“ஓ.கே.ப்பா...பண்ணிடறேன்!...நீ எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருப்பா!”
“ஹேய்...என்ன இது பழைய படங்கள்ல வர்ற ஹீரோயின்க மாதிரி செண்டிமெண்ட் டச் குடுக்கறே?” சொல்லி விட்டு அவன் சிரிக்க
“போப்பா...உனக்கு எப்பவுமே தமாஷ்தான்..நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டிருக்கேன் தெரியுமா?” ராதிகா சோகமாய்ச் சொன்னாள்.
“இட்ஸ் ஓ.கே.பேபி...நான் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கேன்...போதுமா?” அவளைச் சமாதானப்படுத்தும் விதமாய் கொஞ்சலாகச் சொன்னான்.
“சரிப்பா” என்று சிரிப்புடன் சொல்லி விட்டு ராதிகா போன் இணைப்பைத் துண்டித்தாள். அவள் துண்டித்தது போன் இணைப்பை மட்டுமல்ல என்பதை இறைவன் மட்டுமே அப்போதைக்கு அறிவான்.
****
இரவு ஒரு மணி.
காற்றில் ஜில்லிப்பு கூட ஆரம்பித்திருந்தது. மரங்களிலிருந்து சருகான இலைகள் உதிரத் துவங்கியிருந்தன.
வேலியோரம் படுத்துக் கிடந்த அந்தத் தெரு நாய் திடீரென்று எழுந்து தலை தெறிக்க ஓடியது. நாய்கள் கண்களுக்கு பேய்கள் தெரியுமாமே?
முகிலன் மொபைலை எடுத்து ராதிகாவை அழைத்தான். “ஏய்...ராதிகா...என்ன தூங்கிட்டியா?” சன்னக் குரலில் கேட்டான்.
“இல்லைப்பா...” என்றாள் கொட்டாவியுடன்.
“என்ன குரல் டல்லடிக்குது?..ஏய்...இனி மேல்தான் நம்ம வேலையே ஆரம்பிக்கப் போகுது...மணி பார்த்தியா?...ஒண்ணு பத்து!...இன்னும் இருபது நிமிஷத்துல...அமானுஷ்ய ஆட்டங்கள் தொடங்கிடும்!...ஓ.கே?”
“ஓ.கே..நான் ரெடியாத்தான் இருக்கேன்!” ராதிகா எழுச்சியுடன் சொன்னாள்.
“குட்...இப்ப வெச்சிடு...மறுபடியும் நானே கூப்பிடறேன்!” சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.
நேரம் மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டேயிருந்தது.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு முகிலனின் நாசியை ஒரு விதமான அசூசை வாடை தாக்க முகம் சுளித்தவன் நிதானமாய் அந்த வாடையை சுவாசித்து.....யூகித்தான்.
“வ்வேய்...இது பொணம் எரியற வாடையாச்சே...இது...இது எங்கிருந்து வருது?”.