நான் யாரென்று தெரியாதது போல் நடந்து கொள் என்று சொல்லி அவர் ஒரு பென்டிரைவ் தந்து அனுப்பி விட்டார்.
வீட்டிற்கு வந்து பார்த்த பிறகு முழு உண்மையும் தெரிந்து விட்டது. அப்போது இருந்து என் நண்பர்கள் டாக்டருடன் சேர்ந்து திட்டம் போட்டு செயல்பட தொடங்கினோன்.
குழலி மீது காதல் ஏற்பட்டு இருந்தது அப்போது தான் எனக்கு புரிந்தது. ஆனால் குயிலி யாரென்றும் அவள் உயிரோடு இருக்கிறாளா என்று தெரிந்து கொள்ள வேண்டிய நிலையும் இருந்தது.
எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் குயிலின் முகம் மட்டும் நினைவிற்கு வரவில்லை. நியூயார்க்கில் இருக்கும் போதே வீட்டில் இருந்து மெயில் பண்ணுவது வாட்ச் மூலம் தகவல் அனுப்புவது போன்ற பல தொழில் நுட்பத்தை உருவாக்கி கொண்டோம்.
அதனால் தான் சென்னையில் பிரதாபன் வீட்டில் இருந்து என் நண்பர்களோடு பேச முடிந்தது. எங்களது தொழில்நுட்பம் சத்யா வைத்திருந்ததை விட நுணுக்கம் மிகுந்தது என்பதால் சத்யாவின் டிவைஸில் நாங்கள் பேசுவது மெசேஜ் அனுப்புவது எதுவும் பதிவாகவில்லை.
குயிலியை பார்க்க சென்ற நாள் அவளிடம் என் கடந்த காலம் பற்றி கூற நினைத்தேன். ஆனால் முடியவில்லை. அடிபட்டு அவள் வீட்டில் இருக்கும் போது அவள் பாடிய தாலாட்டு பாட்டு எனக்கள் அதிர்வை உண்டாக்கியது. ஆனாலும் ஒரு வேளை இவள் குயிலியாக இல்லாமல் இருந்தால் குயிலியை இழந்து விடக் கூடாது என்று வீட்டிற்கு சென்று பல தகவல்களை சேகரிக்க தொடங்கினேன்.
அப்போது தான் குயிலி வீட்டிற்கு வந்தாள். அவள் நான் மறந்து இருப்பதாக நினைத்த உண்மைகளை சொல்ல அதை பொய் என்று புஷ்பா நிரூபித்த போது குயிலி குழலி இருவரும் ஒன்று தான் என்று புரிந்தது.
உடனே உண்மையை ஏற்றுக் கொண்டால் ஆபத்து அதிகம். அதோடு என் கண் முன்னே இருக்கும் என் அப்பாவை காப்பாற்ற முடியாது என்று சொல்லி தான் அவளை விரட்டினேன். உடனே அவளை அவள் வீட்டுக்கு போய் அழைத்து சென்று பாதுகாப்பாக வைக்க சொல்லி நண்பர்களுக்கு தகவல் அனுப்பினேன். ஆனால் அவள் வீட்டுக்கு செல்லாமல் ஆசிரமம் சென்று ஆசிர்வாதம் தாத்தாவை அழைத்து கொண்டு அவள் வளர்ந்த கிராமத்துக்கு சென்று விட்டாள்.
அவளை தேடி கண்டு பிடிப்பதற்குள் மலைக்கோட்டை சென்று ரகசியம் தெரிந்து கொண்டு மூணார் சென்று விட்டாள். கடைசியில் ஒரு வழியாக அவளை கண்டு பிடித்து அழைத்து சென்று விட்டான் சங்கர்.
புஷ்பா வீட்டில் சமையல் காரராக வாழும் ராமு தான் என் அப்பா என்று தெரிந்தும் என்னால் ஆத்திரத்தை அடக்க முடியாமல் தான் போனது.