துன்புறுத்திட்டு இருந்திருக்கார்!...இதை அந்தப் பொண்ணே என்கிட்ட அடிக்கடி சொல்லி அழுவும்!...ஒரு நாள் அந்த அன்னம்மா “உங்கண்ணனோட விபரீத விளையாட்டு விபரீதமாகவோ ஆயிடுச்சு”ன்னு சொல்லி ஓங்கி அழுதிச்சு!...தெளிவா விசாரிச்சதுல அந்தப் பொண்ணை எங்கண்ணன் கர்ப்பமாக்கிட்டார்!ன்னு தெரிய வந்திச்சு!...”
“அடப்பாவமே?” என்றான் ரவீந்தர்.
“அது மட்டுமில்லை சார்...கீழ் சாதிக்காரியான அந்தப் பொண்ணு அதை சட்ட ரீதியா அணுகப் போறதா என்கிட்ட சொல்லிச்சு!...அந்த விஷயம் எப்படியோ எங்கண்ணன் காதுக்குப் போய் விட, ஒரு நாள் ராத்திரி எங்க மாட்டுத் தொழுவத்துக்கு அவரே தீ வெச்சார்!...அதுல ரெண்டு மாடு...ரெண்டு கன்னுக்குட்டி...கருகி செத்திடுச்சுக....கூடவே அந்த அன்னம்மாவும் கரிக்கட்டை ஆயிட்டா” சொல்லி விட்டுக் கண் கலங்கினாள் ரம்யா.
“உங்க அண்ணன்தான் மாட்டுத் தொழுவத்துக்கு தீ வெச்சார்!ன்னு சொன்னியே அதுக்கு ஆதாரமிருக்கா?” ரவீந்தர் கேட்க,
“இருக்கு சார்!...அதை என் மொபைல் போன்ல வீடியோ எடுத்து வெச்சிருக்கேன் சார்” என்றாள் அவள்.
“அதெப்படி கரெக்டா எடுத்தீங்க?...அவர் தீ வைப்பாருன்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” கொக்கி போட்டான் ரவீந்தர்.
“இல்லை சார்...அன்னிக்கு நடு ராத்திரி பனிரெண்டு மணியிருக்கும்...நான் மொட்டை மாடில...காலியாயிருந்த தண்ணித் தொட்டிக்குள்ளார உட்கார்ந்து ராஜேஸோட பேசிட்டிருந்தேன்...அப்ப கீழே யாரோ நடக்கற சத்தம் கேட்டு மெல்ல எட்டிப் பார்த்தேன். எங்கண்ணன் கையில் பெரிய மண்ணெண்ணைக் கேனோட...மாட்டுத் தொழுவத்தை நோக்கிப் போயிட்டிருந்தார்!...உடனே நான் ராஜேஸ் லைனைக் கட் பண்ணிட்டு வீடியோ எடுக்க ஆரம்பிச்சேன்!...அவர் மாட்டுத் தொழுவத்துக்குப் போனதும் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, அந்தக் கேனிலிருந்த மண்ணெண்ணையை மாட்டுத் தொழுவத்துக் கூரை மேலே ஊற்றித் தீ வைத்தார்...அதை நான் என் ரெண்டு கண்ணால் பார்த்ததும் இல்லாமல்...படமும் பிடிச்சு வெச்சிருக்கேன்!...” என்றாள் ரம்யா.
“அடேங்கப்பா...இது...இது போதும்....”என்றான் ரவீந்தர் உற்சாகமாய்.
“ஆனா...இதுல ஒரு சின்னப் பிரச்சினையும் இருக்கு!” என்று சொல்லி அவள் நிறுத்த,
“என்ன என்ன பிரச்சினை?” டென்ஷனானான் ரவீந்தர்.
“வந்து...அந்த மொபைலை...வீட்டிலேயே வெச்சிட்டு வந்திட்டேன்” என்றாள் ரம்யா.
“சே!”என்று தன் இடது உள்ளங்கையை வலது கை முஷ்டியால் ஓங்கிக் குத்திக் கொண்டான் ரவீந்தர்.